News Just In

11/07/2024 10:41:00 AM

பாதாள உலகத்தினரினால் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள்! அரசு வழங்கியுள்ள கால அவகாசம்!

பாதாள உலகத்தினரினால் பயன்படுத்தப்படும் துப்பாக்கிகள்! அரசு வழங்கியுள்ள கால அவகாசம்




பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அநேகமான சிவில் பாதுகாப்பு துப்பாக்கிகள், பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுவதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு பாதாளக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளைக் கண்டுப்பிடிக்க வேண்டிய அவசியம் இருப்பதன் காரணமாகவே துப்பாக்கிகளை பாதுகாப்பு அமைச்சிடம் மீள ஒப்படைக்குமாறு கோருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

துப்பாக்கிகளை ஒப்படைத்தால் மாத்திரமே இதுவரை அனுமதி வழங்கப்பட்டுள்ள துப்பாக்களின் சரியான விபரங்களை கோவைப்படுத்த முடியுமென்பதுடன் துப்பாக்கிகளைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியுமென்றும் அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆயுதங்களை மீள ஒப்படைப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கியதுடன் அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவிருந்தது.

எவ்வாறெனினும், முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்டு, அந்தக் காலத்தை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: