News Just In

10/25/2024 10:31:00 AM

மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!


மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - தொலைபேசி அழைப்பையடுத்துப் பலத்த பாதுகாப்பு



மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நீதிமன்றப் பதிவாளருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்ததையடுத்து உடனடியாகப் பொலிஸாருக்கு அவர் அறித்துள்ளார்

இதனையடுத்து நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குப் பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டடத்தைச் சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்தப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பில் சியோன் தேவலாய குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சாரான் காசிமின், ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments: