News Just In

5/09/2024 11:59:00 AM

மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட இதய நோய் சத்திர சிகிச்சை இயந்திரம் எங்கே ? : மட்டக்களப்பு சத்திய சாயி பாபா வைத்தியசாலையின் பணிக்கு பாராட்டுக்கள் - எச்.எம்.எம். ஹரீஸ்





நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்ட இதய நோய் சத்திர சிகிச்சை இயந்திரம் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மட்டக்களப்பு சத்திய சாயி பாபா வைத்தியசாலைக்கு பாராட்டுகளும், நன்றியும் தெரிவித்தார்.

புதன்கிழமை (08) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர். அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கிழக்கு மாகாணத்தில் இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் அதிக நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கடந்த காலங்களில் இதய சத்திர சிகிச்சை செய்வதற்கான Catheterization laboratory ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அன்றிருந்த சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல அவர்களினால் வேறு ஒரு மாவட்டத்திற்கு இடமாற்றியதால் கிழக்கு மாகாணத்தில் இருதய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.

இது சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சத்திய சாயி பாபா வைத்தியசாலை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக எவ்வித கட்டணங்களும் இன்றி சிகிச்சை வழங்கி வருவது பாராட்டத்தக்கது. அந்த சத்திய சாயி பாபா வைத்தியசாலை நிர்வாகிகள், வைத்தியர்கள், ஊழியர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். - என்றார்

No comments: