News Just In

4/12/2024 09:36:00 AM

மரணித்த பலஸ்தீனியர்களுக்காக ஜனாஸா தொழுவதுடன், யூத பொருட்களை புறக்கணிக்க தீர்மாணிப்போம் : கலிலூர் ரஹ்மான் கோரிக்கை

.

(நூருல் ஹுதா உமர், எஸ்.அஷ்ரப்கான்)

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பலஸ்தீனியர்களுக்காக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் ஜனாஸா தொழுவதற்கு உலமாக்கள், சமூக தலைவர்கள் முன்வருமாறு கேட்டுக்கொள்வதுடன், பலஸ்தீன மக்களை பலப்படுத்த முற்போக்கு சிந்தனை கொண்ட இலங்கை மக்கள் அனைத்து இஸ்ரேலிய பொருட்களையும் புறக்கணித்து, அவர்களின் உற்பத்திகளை நிராகரித்து பலஸ்தீன மக்களை தினமும் கொல்லும் இஸ்ரேலை பொருளாதார ரீதியாக வீழ்த்த முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினருமான ஐ.ஏ. கலிலூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் அவர் குறிப்பிடும் போது,
பலஸ்தீன காஸா பகுதியில் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில் காஸா மக்களின் வாக்குகளினால் ஜனநாயகம் வெற்றி பெற்றதால் இப்போது இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனத்தை சேர்ந்த காஸா மக்கள் மீது உச்சகட்ட அத்துமீறலை மேற்கொண்டு ஈவிறக்கமின்றி தாக்குதல் நடத்தி அப்பாவி மக்களை கொல்கின்றனர்.

காஸாவில் உள்ள பலஸ்தீன மக்களை படுகொலை செய்வதை நிறுத்தாத இஸ்ரேல் தற்போது காஸா மக்களை ஜனநாயக ரீதியில் வழிநடத்தி வரும் பலஸ்தீன ஜனநாயக ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து பாரிய படுகொலை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

அந்தக் கொலைகளால், புனித ரமலான் பெருநாள் பண்டிகையின் போது இஸ்மாயில் ஹனியாவின் மகன், மூன்று மகள்கள், பேரக்குழந்தைகள் மற்றும் ஏழு கொள்ளுப் பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அதற்காக அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எமது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இஸ்மாயில் ஹனியா உள்ளிட்ட பலஸ்தீன மக்கள் தமது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது பலஸ்தீன மக்களையோ இஸ்ரேல் கொன்றுவிட்டு ஜனநாயக பலஸ்தீன நிலத்தை கையகப்படுத்த முடியாது என்பதை தமது மனவலிமையால் உணர்த்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.




No comments: