
(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி, மண்டூர் பகுதிக்கு சனிக்கிழமை(17.02.2024) மாலை வேளையில் 8 காட்டு யானைகள் கூட்டமாக படையெடுத்து வந்துள்ளன.
இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகவும் அல்லோல கல்லோலப்பட்டுள்ளனர். இந்நிலையில் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதிக்குப் படையெடுத்து வருதாக போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதனுக்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரதேச செயலாளரின் தலைமையில் வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்தின் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பொதுமக்கள், என பலரும் ஒன்றிணைந்து காட்டு யானைக் கூட்டத்தை அப்புறப்படுத்துவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் யானை வெடிகள் வைத்து மிக நீண்ட நேர போராட்டத்திற்கும், பலத்த பிரயத்தனத்திற்கு மத்தியில், சனிக்கிழமை மாலை சுமார் 6.30 மணியளவில் அப்பகுதியிலிருந்து ஒருவாறு காட்டு யானைக் கூட்டத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.
எனினும் அப்பகுதியிலுள்ள கிராமங்களை அண்மித்துள்ள பற்றைக் காடுகளில்தான் யானைகள் தங்கி நிற்கின்றன. அப்பகுதியில் என்றுமில்லாதவாறு மிக அண்மைக்காலமாக காட்டு யானைகளின் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்துள்ள இந்நிலையில் அங்குள்ள காட்டு யானைகளை நிரந்தரமாக துரத்தி அல்லது பிடித்துக் கொண்டு சரணாயலங்களுக்கு விடுமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
மக்கள் தமது குடியிருப்புக்களை அண்டியுள்ள பற்றைகளையும், விவசாய நிலங்களை அண்மித்துள்ள வாய்க்கால்களிலும் உள்ள பற்றைகளையும் அவ்வப்போது வெட்டி அகற்றும் பட்சத்தில் கிராமங்களை அண்மித்து காட்டு யானைகள் தங்கி நிற்காமல் வெளியேறிவிடும். எனவே இவ்விடயத்தில் அப்பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
No comments: