News Just In

1/01/2024 01:41:00 PM

பிரபல வர்த்தகரின் வீட்டில் பட்டப்பகலில் புகுந்த ஆசாமிகள் : சாய்ந்தமருது பொலிஸாரினால் முறியடிக்கப்பட்ட சட்டவிரோத செயல்






நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது பிரதேச முக்கிய வர்த்தக பிரமுகரின் வீட்டில் பட்டப்பகலில் இடம்பெறவிருந்த திருட்டுச்சம்பவம் சாய்ந்தமருது பொலிஸாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று (31) வருட இறுதியென்பதால் வேலையில் மூழ்கியிருந்த குறித்த வர்த்தகருக்கு கிடைத்த தகவலையடுத்து சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் அமைந்திருக்கும் தனது வீட்டுக்கு விரைந்து சென்றபோது இருவர் தனது வீட்டின் முதலாம் மாடியில் கத்தி மற்றும் பல பொருட்களுடன் மரங்களை வெட்டிக் கொண்டிருந்ததாகவும் தன்னை கண்டவுடன் நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒருவர் தனது வீட்டிலிருந்து பாய்ந்து தப்பியோடியதாகவும் உடனடியாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்து வந்த பொலிஸார் வீட்டின் முதலாம் மாடியில் இருந்த மற்றுமொருவரை கைது செய்து அழைத்து சென்றதாகவும் குறித்த வர்த்தகர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மேலும் அவர்கள் வீட்டின் முன்னாள் அழகுக்காக நடப்பட்ட பூ மரங்களை வெட்டியுள்ளதாகவும், இவர்கள் குறித்து சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும், பிரதம பொலிஸ் பரிசோதகருமான எஸ்.எல். சம்சுதீன் தலைமையிலான சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்த குறித்த வர்த்தகர் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இலங்கை மின்சார சபை ஊழியர்களாக தங்களை அறிமுகப்படுத்தி கொண்டதாகவும் அவர்களிடம் இலங்கை மின்சார சபை ஊழியர் என்பதை உறுதிப்படுத்தும் சீருடைகளோ அல்லது அடையாள அட்டைகளோ அல்லது இலங்கை மின்சார சபை வாகனங்களோ இருந்திருக்க வில்லை என்றார்.

மேலும் எனது வீட்டிலிருந்து தப்பியோடிய நடுத்தர வயது மதிக்கத்தக்க நபர் அடங்களாக மேலும் இருவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் தங்களை நான் தாக்கியதாக கூறிக்கொண்டு அனுமதி பெற்றுள்ளனர். நான் அவர்களை தாக்கியதாக கூறுவது முற்றிலும் பொய்யான ஒன்றாகும். சட்டப்படியே குறித்த சந்தேகநபர்கள் மீது நான் நடவடிக்கை எடுத்தேன். இவர்கள் அரச ஊழியர்கள் என்றால் ஏன் என்னை கண்டதும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளையும் விட்டுவிட்டு தப்பியோட வேண்டும். இவர்கள் மின்சார சபை ஊழியர்கள் என்றால் முறையாக அனுமதி பெற்று வந்து அவர்களின் பணியை செய்திருக்க முடியும். அவர்கள் அப்படி முறையான அனுமதியை பெறாமல் அத்துமீறி எனது வீட்டின் மாடியில் ஏறியது தப்பு என்பதை பொலிஸாருக்கு என்னுடைய முறைப்பாட்டில் தெரிவித்துளேன்.

எனது வீட்டில் அத்துமீறி வந்து எனது வீட்டு மரங்களுக்கும், சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த இவர்களுக்கு நீதித்துறையும், சட்டத்துறையும் சரியான தண்டனையை வழங்கும் என்று தான் நம்புவதாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.


No comments: