News Just In

11/21/2023 07:40:00 PM

இயலாமை என்று எதுவும் இல்லை” விழிப்புணர்வூட்டும் இளையோர் நிகழ்வு!





- ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இன மத பேதங்களுக்கப்பால் விசேட தேவையுடையோரின் விசேட ஆற்றல்களைக் கௌரவிக்கும் வகையில் “இயலாமை என்று எதுவும் இல்லை” எனும் தொனிப் பொருளிலமைந்த விழிப்புணர்வூட்டும் இளையோர் நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்தி வருவதாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் அலுவலர் காந்தன் நிர்மலா தெரிவித்தார்.

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட தன்னார்வத் தொண்டர்களான இளைஞர் யுவதிகளால் மூவின இளையோர் மற்றும் மாணவர்களின் ஆளுமை ஆற்றல்களை மேம்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த மகிழ்வூட்டல் செயற்பாடு சமூக சேவைத் திணைக்களத்தின் மட்டக்களப்பு கும்புறுமூலை தொழில் பயிற்சி நிறுவனத்தில் இடம்பெற்றது.

செவ்வாயன்று 21.11.2023 இடம்பெற்ற இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து அங்கு தொழில் பயிற்சி நிறுவனத்தின் பொறுப்பதிகாரி காந்தி சுகந்தினி கருத்துத் தெரிவித்தார்.

இளையோர்கள் மத்தியில் இனம் மொழி மத பேதங்களையும் இயலாமை என்ற மனப்பாங்கையும் கடந்து எல்லோராலும் முடியும் என்பதை வலியுறுத்துவதே இத்தகைய செயற்பாடுகளின் நோக்கமாகும்.

இளைஞர் யுவதிகள் மத்தியில் சிறந்த மனப்பாங்கு மாற்றம் ஏற்பட வேண்டும். இந்ததொழில் பயிற்சி நிலையத்தில் இன மத மொழி பிரதேச வேறுபாடுகள் எதுவுமில்லை. மனத்தளவில் நாங்கள் ஒன்று ஓர் குலம்தான். சமாதானம் நல்லுறவு கூட்டாகப் பணியாற்றுதல் ஆகியவையே எங்களது சிந்தனையாகும்.” என்றார்.

இந்நிகழ்வில் தொழில் பயிற்சி நிறுவனத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வை. ஜெகதாஸ், வி. வனிதா விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் சிரேஷ்ட சமூக நலத் தயாரிப்பு அலுவலர் எஸ். சுகிர்தவிழி உட்பட தொழில் பயிற்சி நிறுவகத்தில் தொழில் பயிற்சிகளை மேற்கொள்ளும் மூவினங்களையும் சேர்ந்த மாணவர்கள், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட தன்னார்வத் தொண்டர்களான தமிழ் முஸ்லிம் சமூக இளைஞர் யுவதிகள் ஆகியோரும் பங்குபற்றினர்.

நிகழ்வில் இன ஐக்கியத்தையும்; சமாதான சகவாழ்வையும் பிரதிபலிக்கும் வகையில் இளைஞர் யுவதிகளாலும் தொழிற் பயிற்சி நிலைய மூவின மாணவர்களாலும் சித்திரங்கள் வரையப்பட்டன.

அத்துடன் இயற்கையோடு இணைந்து வாழுதல் எனும் செயற்திட்டத்தின் கீழ் பயன்தரும் மரக்கன்றுகளும் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நாட்டப்பட்டன.


No comments: