மட்டக்களப்பில் புதூர் பிரதேச இருவருக்கு பல நிபந்தனைகளில் பிணை!
மட்டக்களப்பில் ஆபத்தானவர்கள் என இருவருக்கு எதிராக பொலிஸார் தொடர்ந்த வழக்கில் பல நிபந்தனைகளில் பிணை செல்ல மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர்போல் திங்கட்கிழமை அனுமதியளித்தார்.
இருவரையும் ஒருவருட நீதிமன்ற சமூக சீர்திருத்த கண்காணிப்பிலும், குற்றம் இடம்பெறும் இடத்தில் இருக்க கூடாது எனவும், குற்றச் செயலில் ஈடுபடவோ, திருட்டு சம்பவங்களில் ஈடுபடவோ கூடாது எனவும் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனை விதித்தார்.
இருவரையும் நன்னத்தை கொண்ட தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் பீற்றர்போல் திங்கட்கிழமை (11) அனுமதியளித்தார்.
மட்டு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் 24, 26 வயதுடைய இருவர் தொடந்து திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை, கூலிக்கு ஆட்களை அடிப்பது, ஆட்களை வாளால் வெட்டுவது போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதுடன் இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த இருவரும் ஆபத்தானவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 83 ம் பிரிவின் கீழ் பொலிஸாரால் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையில் மாலை 4 மணி தொடக்கம் 6 மணிக்குள் மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து இடவேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடனும் பிணை வழங்கப்பட்டது.
No comments: