News Just In

6/05/2023 12:23:00 PM

கிழக்கு கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கிலேயே நியமிக்க கல்வி அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் உறுதியளிப்பு !




நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் இன்றைய சந்திப்பின் போது உறுதியளித்தார்.

கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான நியமனம் கிழக்கு மாகாணத்திற்கு வெளியே வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்த ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் சுற்றாடல் அமைச்சர் எந்திரி இஸட்.ஏ. நஸீர் அஹமட், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் ஆகியோர் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த இன்று (05) கல்வியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை கிழக்கிலேயே பணிக்கமர்த்த நியமனம் வழங்க வேண்டும் என்றும், கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இடம்பெறவுள்ள அநீதி தொடர்பிலும், கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடம் தொடர்பிலும், கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் அழுத்தமாக கோரிக்கையை முன்வைத்த எம்.பிக்கள் குழு துரித கதியில் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

இவற்றெல்லாம் கேட்டறிந்த அமைச்சர் ஏற்கனவே நியமன கடிதங்கள் சகல மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் மாகாண ஆளுநர்களிடம் கடிதங்களை மீளப்பெறல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாவும் நாளை மாலை முதற்கட்டமாக ஊவா மாகாண ஆளுநரை அழைத்து பேச உள்ளதாகவும் கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கு தனது பூரண ஆதரவை எப்போதும் வழங்க தயாராக உள்ளதாகவும், கிழக்கு மாகாணத்திற்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண கல்வியற் கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் எம்.பி க்களுக்கு உறுதிபட தெரிவித்தார் என இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.


No comments: