News Just In

6/17/2023 02:17:00 PM

மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினரையும் விசாரிக்க வேண்டும் ! – ஐ.நா.சபையின் மீளாய்வுக்குழு




காணாமல் ஆக்கப்படல்கள் மற்றும் தன்னிச்சையான தடுத்து வைப்புக்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறும் ஐ.நா. பொதுச்சபையின் மீளாய்வுக்குழு இலங்கைக்குப் பரிந்துரைத்துள்ளது.

மேலும் காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு உரிய பதிலைக் கூறுவதுடன் இழப்பீட்டை வழங்கல், பயங்கரவாதத்தடைச் சட்டத்தை முற்றாக நீக்குவதுடன் அதற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் புதிய சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும் அனைத்து விதமான மனித உரிமை மீறல்கள் சம்பவங்கள் குறித்து இராணுவத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரிடமும் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி உள்ளகப் பொறிமுறை நிறுவுதல், வெறுப்புணர்வுப் பேச்சு மற்றும் அடக்குமுறைகளை தடுப்பதற்கு ஏற்ற செயன்முறையொன்றை நிறுவுவதன் மூலம் தேசிய நல்லிணக்கம் தொடர்பான கொள்கையை மேலும் வலுப்படுத்துமாறும் அக்குழு தெரிவித்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்த மீளாய்வினைக் கடந்த பெப்ரவரி மாதம் முதலாம் திகதி மேற்கொண்டிருந்தத நிலையில், இலங்கை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய பரிந்துரைகளை உள்ளடக்கிய 24 பக்க அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments: