News Just In

2/24/2023 01:31:00 PM

இலங்கை போன்ற நாடுகளில் விரிவுரையாளர்களின் பணி தொடர்பான, புதிய நோக்கமும், தேவையும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது : உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்



மாளிகைக்காடு நிருபர் (நூருல் ஹுதா உமர்)

பல்கலைக்கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்கள் இயல்பாக உயரிய சமூகத் தொடர்புகளை பெறுவதால், உயரிய சமூக அங்கீகாரத்தைப் பெறுகின்றனர். அதே போல் பல்கலைக் கழகங்களில் கற்பிக்கும் விரிவுரையாளர்களுக்கான சமூக அந்தஸ்து ஒப்பீட்டு ரீதியில் உயர்வானது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணியாற்றுவதற்கான மொழியறிவு, விடய உள்ளடக்கம், கற்பித்தல் நுட்பங்கள் மற்றும் சமூக திறன்கள் என்பன போதுமானதாக இல்லை என்று உணரப்பட்டுள்ளது. புத்துணர்ச்சி நோக்கும், தொடர்கல்வி ஊக்கமும், பன்மொழித் தேர்ச்சியும், தகவல் தொழில் நுட்ப தகைமையும், எங்கும் எப்போதும் பணியாற்றும் மனப்பாங்கும் கொண்டவர்களே விரிவுரையாளராக பணியாற்ற முடியும் என தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலையில் விரிவுரையாளர்களுக்கான மனித வள மேம்பாட்டு நிகழ்வு ஊழியர்கள் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர்கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மாவின் தலைமையில் (23) ஊழியர் மேம்பாட்டு மையத்தின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்: தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இலங்கை போன்ற நாடுகளில் விரிவுரையாளர்கள் பணி தொடர்பான, புதிய நோக்கம், தேவையும் நன்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொறுமையாக விருத்தி செய்ய வேண்டிய சமூக பிரிவினராக விரிவுரையாளர்கள் காணப்படுகின்றனர். விரிவுரையாளர்கள் மிக விரிவான பாடத்திட்டங்களை தயாரித்து தொடர்ச்சியாக அவற்றை மீட்டு கொண்டிருத்தல் வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

பல்கலைக்கழகங்களில் போதியளவு அறிவை வழங்குதல் போதுமானதன்று, அத்தகைய அறிவை நடைமுறை வாழ்வில் பிரயோகிப்பதற்கான தேர்ச்சிகளை விருத்தி செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சமூக இலக்குகள், சமூக தொழிற்பாடுகள், சமூக அசைவியக்கம், சமூக முன்னேற்றம் போன்ற ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இயங்கியல் நடைமுறைகளில் மையச் சக்கரமாக தொழிற்படும் வினைத்திறனையும், விளைதிறனையும் தீர்மானிப்பவர்கள் விரிவுரையாளர்களே. விரிவுரையாளர்கள் என்ற நோக்கில் மாத்திரமின்றி சமூக மாற்றங்களை வழிப்படுத்துபவர்கள், விசைப்படுத்துபவர்கள் என்ற முறையிலும் முக்கியமானவர்கள். விரிவுரையாளர்கள் இவ்வாறு செய்யுமிடத்து விரிவுரையாளர்கள் மாறிவரும் வகிபங்கினை வினைத்திறனுடனும், விளைதிறனுடனும், சமூக பொறுப்புணர்வுடனும் நிறைவேற்ற முடியும். இவை தொடர்பான ஆய்வுகளும் எதிர்காலத்தில் ஊக்குவிக்கப்படும் என்றும் உபவேந்தர் தனது உரையில் தெரிவித்தார்.

நிகழ்வு தொடர்பான முழுமையான தகவல்களை நிகழ்வின் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் விபரமாக எடுத்துரைத்தார்.


No comments: