News Just In

1/11/2023 12:58:00 PM

அம்பாறை மாவட்ட எல்லை நிர்ணயம் சம்பந்தமான கூட்டம் : பல்லின எம்.பிக்களின் பங்கெடுப்புடன் கலந்துரையாடல் நூருல் ஹுதா உமர்




நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட எல்லைநிர்ணய கூட்டம் இன்று மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்லஸ் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், பொது நிறுவனங்களின் பிதானிகளின் பங்குபற்றலுடன் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அங்கு கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களுடன் இணைந்து சில உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெற்ற அநீதிகள் தொடர்பாக முன்வைத்த அதிருப்தியை அடுத்து இது தொடர்பில் தீர்க்கமான தீர்வை வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் முன்வைத்திருந்த கோரிக்கைக்கு அமைய இன்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், எம்.சி. பைசால் காசிம், சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் முதுநபின், த. கலையரசன், டபலியு. டி. வீரசிங்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு நீண்ட நேரம் தமக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

முஸ்லிம் பிரதேசங்களில் மாவட்ட எல்லை நிர்ணய ஆணைக்குழு முன் வைத்திருக்கும் எல்லை நிர்ணயங்கள் அதிருப்தியில் கடந்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் முன் வைத்தது போன்று இந்த கலந்துரையாடலில் அவர் உட்பட பலரும் முன்வைத்திருந்தனர். தொடர்ந்தும் கல்முனை மாநகரில் பல வருடங்களாக காணப்படும் பல்வேறு பிரச்சினைகளை காரணமாக கொண்டு இன விரிசலை உண்டாக்கும் விதமாக எல்லை நிர்ணயங்களை செய்து வட்டாரங்களை குறைத்து இன முரண்பாடுகளை உருவாக்கி விடாமல் சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமாபாத் போன்ற பிரதேசங்களை உள்ளடக்கியதாக இப்போது இருப்பது போன்ற 23 வட்டாரங்களும், 24 உறுப்பினர்களையும் தொடர்ந்தும் உறுதிப்படுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் யோசனை ஒன்றை முன்மொழிந்துள்ளதுடன் காரைதீவு பிரதேச சபையில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டுவது தொடர்பிலும் முன்மொழிவொன்றை முன்வைத்தார். இதுதொடர்பில் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு எடுத்துரைத்து தொகுதிக்குரிய பாராளுமன்ற உறுப்பினரின் பரிந்துரையாக இதனை முன்மொழிந்து அதை அமுல்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளார். தமிழ் தரப்பினரும், இன்னும் பலரும் பல்வேறு யோசனைகளை இது விஷயம் முன்மொழிந்திருந்ததுடன் இது விடயமாக நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது டன் இந்த கலந்துரையாடல் முஸ்லிம்களுக்கு திருப்தியாக அமைந்திருந்ததாக உள்ளது.


No comments: