News Just In

1/24/2023 12:45:00 PM

தேர்தல் காலங்களில் பொய்யான உறுதிமொழிகளை வழங்கிவிட்டு மீண்டும் வாக்கு கேட்டு வருபவர்களை விரட்டியடிப்போம்!



(அபு அலா)
கடந்த தேர்தல் காலங்களில் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக பொய்யான உறுதிமொழிகளை வழங்கிவிட்டு வெற்றிபெற்றுச் சென்ற பல கட்சிகளின் வேட்பாளர்களும், அக்கட்சிகளின் தலைமைகள் மீதும் பொதுமக்கள் பெரும் எதிர்ப்புக்களைக் காட்டி அதிருப்தியையும் வெளியிட்டு வருவதை நாம் எல்லோரும் காணக்கூடியதாக இருக்கின்றது என்று தேச விடுதலை மக்கள் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை புறத்தோட்ட வட்டார வேட்பாளர் அமீன் ஹம்சாக் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை அறபா வட்டார பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் இன்று காலை (14) மீனோடைக்கட்டில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேச விடுதலை மக்கள் கட்சியில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் இளம் வேட்பாளர்களாகவே இருக்கின்றனர். அவர்களுக்கு விளையாட்டுக் கழகங்கள், மகளிர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பல சமூக சேவைகள் அமைப்புக்கள் போன்ற பல்வேறுபட்ட நிறுவனங்கள் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். அதனால் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவைப்பெற்று வருகின்றோம்.

“மக்களுக்கான விடிவு - இளம் தலைமுறையினர்” என்று மக்கள் மத்தியில் பாரியதொரு ஆதரவு வரவேற்பலையைப்பெற்று வருகின்ற இக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் என்றும் மக்களின் விடிவுக்காக களத்தில் நின்று போராடி அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்றவராக இருக்கின்றார். எமது இளம் தலைவரின் கரத்தைப் பலப்படுத்த தேச விடுதலை மக்கள் கட்சிக்கு தங்களின் ஆதரவுகளை வழங்க பொதுமக்கள் தாமாகவே முன்வந்துகொண்டிருக்கின்றனர்.

மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கட்சியாகவும், வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுப்பினர்களாகவும் நாங்கள் என்றும் செயற்படுவோம். மக்களின் திருப்தியைப்பெற்று, அவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எங்களுடைய இலக்காகும். இதில் வெற்றிகொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையாக பயணிப்பதன் மூலமே எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்றார்.


No comments: