News Just In

11/16/2022 07:48:00 AM

புளியந்தீவு, வன்னியனார் வீதி வடிகான் அமைப்பு வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன!

எழுச்சி மிகு மாநகரம் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட 17ஆம் வட்டாரம் புளியந்தீவு, வன்னியனார் வீதி வடிகான் அமைப்பு வேலைகள் நேற்று (15) செவ்வாய் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2021ம் ஆண்டுக்கான பாதீட்டு நிதியின் ஊடாக மட்டக்களப்பு மாநகர சபையின் 17ஆம் வட்டார உறுப்பினர் ம.ரூபாகரன் அவர்களின் பாதீட்டு முன்மொழிவுக்கு அமைய 2.1 மில்லியன் ரூபாய் நிதியில் புளியந்தீவு, வன்னியனார் வீதி வடிகான் அமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேற்படி வடிகான் அமைப்பு பணிகளை மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபையின் வேலைகள் குழு தலைவர் இரா. அசோக், மாநகர சபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், அந்தோணி கிருராஜன், துரைசிங்கம் மதன், மாநகர சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான டி.ஜே.கிறிஷ்டிராஜ், ஆர். சுதர்சன் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

மிக நீண்ட காலமாக, மழை காலங்களில் அப்பகுதியில் மழை நீர் தேங்கி வருவதுடன் வதிவிடங்களுக்குள் நீர் உட்புகுவதால் பொதுமக்கள் தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக குறித்த வட்டார உறுப்பினர் ஊடாக மாநகர சபைக்கு கிடைக்கப்பட்ட வேண்டுகோளிற்கு அமைய மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


No comments: