News Just In

10/06/2022 10:43:00 AM

கல்வியமைச்சின் மீலாதுன் நபி தொடர்பிலான அறிவிப்பு வரவேற்கத்தக்கது : கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கலீலுர் ரஹ்மான்




நூருல் ஹுதா உமர்

சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்கள், சகல முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயிலும் ஏனைய பாடசாலை அதிபர்களுக்கு முகவரியிட்டு கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரணசிங்க அவர்கள் மீலாதுன் நபி (முஹம்மத் நபி [ ஸல் ) அவர்களின் பிறந்ததின) கொண்டாட்டம் -2022 விடயம் தொடர்பாக கல்வி அமைச்சின் 31/2015 இலக்கமும் 2015.12.11 ஆம் திகதியும் கொண்ட சுற்றுநிருபத்தின் பால் உங்கள் கவனம் ஈர்க்கப்படுகின்றது என பொருள்பட அனுப்பியுள்ள சுற்றுநிருபம் வரவேற்கக்கூடியது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஐ.ஏ கலீலுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த மாதம் 22ம் திகதி தன்னால் கல்வி அமைச்சுக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 20 ஒக்டோபர் 2022 ஆம் திகதி நாடு முழுவதிலுமுள்ள முஸ்லிம் பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பாடசாலைகளிலும் முஸ்லிம் சமய விழுமியங்களை மேம்படுத்தும் வகையில் மீலாதுன் நபி விழா கொண்டாடப்படுதல் வேண்டுமென வலியுறுத்தியிருப்பது நாட்டின் எதிர்காலத்தை சிறப்பாக்க வழிசமைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்விழாவினை கொண்டாடுவதன் ஊடாக தாய் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் சுபீட்சம் மற்றும் சௌபாக்கியம் கிடைக்கப் பெற பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ள அமைச்சின் செயலாளர் அதிபர்கள் இவ்விடயம் பற்றி சகல ஆசிரியர்களுக்கும் முன்கூட்டியே தெரியப்படுத்துவதுடன் பாடசாலையில் மீலாதுன் நபி விழா நடாத்தப்படும் விதம் தொடர்பாக தீர்மானித்து பாசாலையின் மாணவ, மாணவிகளுக்கும் அது பற்றி அறிவித்தல் வேண்டும் என்றும் இவ்விழாவில் மதகுருமார், அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் , மாணவர்கள் , மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்தவர்களை பங்குபற்ற செய்து கல்வி நடவடிக்கைகளுக்கு பாதகமில்லாதவாறு நடாத்தப்படுதல் வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டுள்ளது சிறப்பான விடயமாகும்.

அவ்வாரத்தில் பாடசாலையும் பாடசாலை சூழலும் சுத்தம் செய்யப்பட்டு இஸ்லாமிய கலை அம்சங்களுடன் நேர்த்தியான முறையில் அலங்கரிக்கப்படுதல் சாலச் சிறந்ததாகும் . 2022 ஆம் ஆண்டு ஒரே நாளில் தேசிய ரீதியில் மீலாதுன் நபி விழாவினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுத்த கல்வியமைச்சுக்கு முஸ்லிங்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


No comments: