சுற்றாடல் பற்றிய சர்வ மத போதனைகள் அடங்கிய தொகுப்பு நூல் வெளியீடும் சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித்திட்டத்தின் முத்திரை வெளியீடும் இடம்பெற்றுள்ளது.
மதங்களில் சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி கற்பிக்கப்படுகின்ற போதனைகளை உள்ளடக்கி அச்சிடப்பட்ட சர்வ சமய நூலின் அங்குரார்ப்பண விழா வியாழக்கிழமை 20.10.2022 பத்தரமுல்லை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இதில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ். அமரசிங்க அமைச்சின் மேலதிக செயலாளர்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஆலோசகர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நூல் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு கருத்துரைத்த சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் இந்த சர்வ மத புத்தகம் முன்வைக்கும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் நோக்கத்திற்காக இந்நாட்டு மக்களுக்கு அறிவூட்டுவதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை முன்னின்று செயற்பட வேண்டும்.
இயற்கை வளங்களை அழிக்காமல் நாசம் செய்யாமல் பாதுகாப்பதற்கு பாடசாலை முறைமையிலுள்ள சுற்றாடல் கல்வி திட்டத்தை மென்மேலும் சாத்திமயப்படுத்துவதும் தற்போதைய சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோக ரீதியான சுற்றாடல் பாதுகாப்பு பணிகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் பௌத்த போதனைகளில் நிபுணரான தேசிய மதிப்புகள் ஊக்குவிப்பு நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்தி குலதுங்க, இஸ்லாம் மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பரீனா ருசைக், கிறிஸ்துவ மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கண்டி தேசிய இறையியல் கல்லூரி விரிவுரையாளர் வண. கலாநிதி ஜயலத் பலகல்ல, இந்து சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் சிவபூமி அரும்பொருட் காட்சியகத்தின் தலைவர் கலாநிதி ஆறுமுகம் திருமுருகன் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்கினர்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் தெரிவிப்பதற்காக பல்வேறு சமய அறிஞர்கள் ஆற்றி வரும் பெரும் பணியை சமூகமயமாக்க மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்ததன் விளைவாக பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்கள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ள சுற்றாடல் பற்றிய போதனைகள் இந்த சர்வமத புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
No comments: