News Just In

10/04/2022 07:04:00 AM

சோமாலியாவில் அரசாங்க அலுவலகத்திற்கு இரட்டை குண்டு வெடிப்பு! சுகாதாரத்துறை மந்திரி உட்பட 12 பேர் உயிரிழப்பு!

சோமாலியாவில் அரசாங்க அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் பலியாகியுள்ளது.

சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த பயங்கரவாத அமைப்பு சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட சோமாலிய அரசை கவிழ்க்க முயற்சித்து வருகிறது.

மேலும், பொதுமக்கள், ராணுவத்தை குறிவைத்து அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அந்நாட்டின் ஹிரன் மாகாண தலைமை அலுவலகத்தில் இன்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் தலைமை அலுவலகத்தில் இருந்த ஹிரன் மாகாண சுகாதாரத்துறை மந்திரி உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்திற்கு அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

அல்ஷபா அமைப்பின் முக்கிய தலைவன் அப்துல்லாவை கடந்த சனிக்கிழமை (01-10-2022) சோமாலிய பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற நிலையில் அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments: