News Just In

9/23/2022 10:31:00 AM

மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்; குச்சவெளி தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!




பைஷல் இஸ்மாயில் -
சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை உள்ளடக்கிய போசணை கொள்கைத் திட்டத்தை எமது பிரதேசத்தில் அமுல்படுத்துகின்ற அதேவேளை அரிசி ஆலைகளையும் எமது பிரதேசத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாறக் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட பிரதேச மட்ட கலந்துரையாடல் (22) குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாறக் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்குவதுடன் அவர்களின் வறுமையையும் ஒழிக்க முடியும். அத்துடன் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு சத்துணவு வழங்குவதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுவித்து, உணவுப் பாதுகாப்பையும், வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பானஆ ரோக்கிய கிராமத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

குச்சவெளி பிரதேசத்தில் கால்நடைகளின் தொல்லை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் விபத்துச் சம்பவங்களும் அதிகரித்து வருன்றன. கால்நடைகளை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராவிட்டால் இன்னும் பல ஆபத்துக்களை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். எமது மக்களையும், அவர்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதுதொடர்பான அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். அவர்களுக்கான சகல ஒத்துழைப்புக்களை குச்சவெளி பிரதேச சபையும், சபை உறுப்பினர்களும் வழங்க என்றும் தயாராக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பித்தனர்.


No comments: