News Just In

9/16/2022 09:26:00 PM

பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட பால்மாக்கள் பறிமுதல்





எஸ்.எம்.எம்.முர்ஷித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்றும் இன்றும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பழைய விலையில் உள்ள பால்மாக்களை பதுக்கி வைத்திருந்த வர்த்தக நிலையம் முற்றுகையிடப்பட்டு பால்மாக்களும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

பரிசோதனை நடவடிக்கையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருனாகரனின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் சகிதம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளிற்கமைய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தை அண்டிய பிறைந்துரைச்சேனை மாவடிச்சேனை பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் சில்லறை வியாபார நிலையமொன்றில் 540.00 ரூபா 790.00 ரூபா ஆகிய பழைய விலையில் பதுக்கி வைக்கப்பட்ட 400 கிராம் பால்மாக்கல் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், பால்மாக்கள் புதிய விலையான 1160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன், குறித்த வர்த்தக நிலைய உரிமையாளருக்கு எதிராக வழக்குத்தாக்களும் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக வியாபார நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுவதுடன், அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வதையும், பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் பிடித்து சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார்.


No comments: