News Just In

9/19/2022 03:56:00 PM

நான்கு நாட்களில் உச்சம் தொட்ட தாமரைக்கோபுரத்தின் வருமானம்!

தாமரைக் கோபுரம் திறக்கப்பட்டு நான்கு நாட்களில் சுமார் 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதுவரையுள்ள நான்கு நாட்களில் சுமார் 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாகவும் குறிப்பாக நேற்று இரவு 8 மணிவரை 6800க்கும் அதிகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதாகவும் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பெருமளவிலான மக்கள் வருகையால் தாமரை கோபுர வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து, நிலைமையை கட்டுப்படுத்த நிர்வாகம் நேற்று இரவு நுழைவுச்சீட்டுக்கள் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தாமரைக் கோபுரத்தை பார்வையிட 500 ரூபாய் நுழைவுச்சீட்டுக்கள் மட்டுமே தற்போது வழங்கப்படுவதுடன், தினமும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: