News Just In

7/18/2022 07:51:00 PM

கோட்டாபயவிற்கு எதிராக மலேசிய தமிழர்கள் போராட்டம்!

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக மலேசிய தமிழர்கள் அணிதிரண்டு குரல் எழுப்பியுள்ளனர்.

பினாங்கு மாநில துணை முதல்வர் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதியுரைஞர் குழுப் பிரதிநிதி பேரா.இராமசாமி தலைமையில் அணிதிரண்ட தமிழர்கள், கோட்டாபயவை சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற முழக்கத்தினை எழுப்பியுள்ளனர்.

மலேசிய தமிழர் அரசியல் பிரதிநிதகளான சதீஸ் முனியாண்டி, டேவிட் மர்செல் உட்பட பல தமிழர் அமைப்பினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.

சிங்கப்பூர் தூதரை சந்தித்து கோரிக்கை மனுவினை கையளித்து, தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோட்டாபயவை சிங்கப்பூரை விட்டு வெளியேற்றி சர்வதேச நீதிமன்றிடம் கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டாபய ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளது.

போர் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையின் அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமை சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார் முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

No comments: