News Just In

7/30/2022 04:22:00 PM

மனைவியை கடத்திய கணவன் உள்ளிட்ட மூவர் கைது!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்துவிட்டு பெற்றோருடன் வாழ்ந்து வரும் தனது மனைவியை வீடு புகுந்து கடத்திச் சென்ற குறித்த பெண்ணின் கணவர் அவருடைய பெற்றோர் உட்பட கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் அதே பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் திருமணம் முடித்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கணவனைவிட்டு பிரிந்து சென்று தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகின்ற அவர் கணவனிடம் இருந்து விவாகரத்து கோரி அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று (29) காலையில் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வந்த கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேர் பெண்ணின் தாயார் மற்றும் அவரது இரு சகோதரிகளை தாக்கிவிட்டு பெண்ணை கடத்தி கொண்டு சென்று தனது வீட்டின் அறையில் பூட்டி வைத்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பெண்ணின் தாயார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டு தலைமையக பொலிசார் பெண்ணை கடத்திச் சென்றவர்களின் வீட்டை முற்றுகையிட்டு பெண்ணை மீட்டதுடன் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் கணவர் அவரது பெற்றோர் உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் நேற்று மாலை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

No comments: