News Just In

6/16/2022 12:45:00 PM

ஏறாவூர் வாவியில் இருந்து மீனவரின் சடலம் மீட்பு!




 ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து மீனவர் ஒருவர் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை காலை 16.06.2022 மீட்கப்பட்ட இச்சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு துரைச்சாமி வீதியை அண்டி வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (வயது 51) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

வழமைபோன்று தனியாகவே வாவியில் இரவு நேர மீன்பிடிக்குச் செல்லும் இவர் இரவுச் சாப்பாட்டையும் எடுத்துக் கொண்டு புதன்கிழமை மாலை 15.06.2022 தோணியில் வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

எனினும் வியாழக்கிழமை காலை அவரது சடலம் வாவியில் மிதப்பதைக் கண்டு சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளனர்.

புதன்கிழமை மாலை வாவியில் பலத்த காற்று வீசியதாகத் தெரிவிக்கும் மீனவர்கள் அதன் காரணமாக தோணி கவிழ்ந்து மீனவர் வாவியில் வீழ்ந்து மூழ்கியிருக்கக் கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். ஏறாவூர் பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


No comments: