News Just In

6/26/2022 05:08:00 PM

எரிபொருள் நிலையத்தில் முறைகேடு - தெரிந்தவர்களுக்கு மாத்திரம் முன்னுரிமை!

வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தனியாருக்கு சொந்தமான அவசர தேவைக்கென ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முறைகேடாக எரிபொருள் வினியோகம் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அவசர தேவைக்கென பதினெட்டு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடியில் தலா ஒன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டு காணப்படுகின்றது.

அந்த வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில்; அத்தியாவசிய தேவைக்கு அனுமதி பெற்றவர்களுக்கு வழங்குவது குறைவாக காணப்படுவதுடன், மதகுருமார்கள், கர்ப்பினிப் பெண்கள் வைத்தியசாலைக்கு செல்வதற்கு வாகனத்திற்கும் வழங்காமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றது.

அத்தோடு கல்குடா பிரதேசத்திலுள்ள ஊடகவியலாளர்கள் தங்களது சேவையை மேற்கொள்வதற்கு மக்களின் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சனைகளை மேற்கொள்ள வாகனத்திற்கு பெற்றோல் இல்லை என்பதால் பிரதேச செயலாளரின் அனுமதிக் கடிதத்தினை சனிக்கிழமை வழங்கிய போது ஞாயிற்றுக்கிழமை காலை வருமாறு குறித்த நிரப்பு நிலையத்தினர் கூறினர்.

அந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிரப்பு நிலையத்திற்கு சென்று குறித்த அனுமதிக் கடிதத்தினை தூக்கி எறிந்த நிலையில் பெற்றோல் முடிந்ததாக கூறப்பட்ட நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், நிரப்பு நிலையத்தினருக்கு நெருங்கியவர்கள், வாழைச்சேனையில் உள்ள பல்பொருள் வர்த்தக நிலைய வாகனம் என்பவற்றிக்கு பாதுகாப்பு பிரிவினரின் முன்னிலையில் எரிபொருள் வழங்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தங்களுக்கு தேவையானவர்களுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்குவதுடன், அங்கு கடமையாற்றுபவர்கள் வரும் மக்களுக்கு தகாத வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது தினமும் இடம்பெற்று வருகின்றது.

மட்டக்களப்பு பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் நிரப்பு நிலைங்களுக்கு சென்று பரிசோதனைகள் மேற்கொள்வதும் இல்லை. கண்டு கொள்வதும் இல்லை. இதனால் மக்கள் பெரும்பாலும் மனஉளைச்சலுக்கு ஆளாகி செல்கின்றனர். அத்தோடு செயலக உத்தியோகத்தர்கள் கடமை நாட்களின் குறித்த பகுதியில் நிற்கும் சமயத்தில் மாத்திரம் சற்று ஒழுங்காக வினியோகம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே வாழைச்சேனையிலுள்ள தனியாருக்கு சொந்தமான நிரப்பு நிலையத்தில் இடம்பெறும் அநீதிக்கு ஒரு தீர்வு கிடைக்கும் வகையில் அரசியல்வாதிகள் மற்றும் முறையான அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments: