- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
எத்தனை தடவைதான் உரக் கூவி எடுத்துச் சொன்னாலும் மக்களின் குரலைச் செவிமடுப்பவர்களாக தற்போதைய ஆட்சியாளர்கள் இல்லை என ஏறாவூர் நகர சபையின் தலைவர் எம்.எஸ். நழிம் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் 51வது மாதாந்த அமர்வு நகர சபை அலுவலக மண்டபத்தில் திங்கள்கிழமை 27.06.2022 இடம்பெற்றது.
அங்கு மாதாந்த அமர்வை ஆரம்பித்து வைத்து மேலும் உரையாற்றிய நகர சபைத் தலைவர் நழிம், தற்போதைய நெருக்கடியான கால கட்டத்தில் மக்களின் வாழ்க்கை இரவு பகலாக எரிபொருளுக்காக தெருக்களில் கழிகிறது. தொழிலை இழந்து வருமானத்தை இழந்து நிம்மதியை இழந்து எதிர்காலத்தில் விரக்கதியுற்றவர்களாக மக்கள் நடைப்பிணங்களாகியுள்ளனர்.
அதனால் மக்களின் எதிர்ப்பும் அதிகரித்தே வருகிறது. வாழ்வாதாரமும் இல்லை வாழ்வும் இல்லை என்ற நிலைக்கு மக்கள் விரக்தியடைந்துள்ளார்கள்.
எரிபொருளும் கிடைத்ததில்லை. ஆகக் குறைந்தது வயிற்றுப் பசிக்கு எதுவுமில்லைஎன்ற நிலை உருவாகியிருக்கின்றது. மக்கள் கையறு நிலையில் தோற்றுப் போய் உள்ளார்கள். அனைத்துத் தொழில் துறைகளுமே கேள்விக்குறியாகியுள்ளது. அன்றாடத் தொழிலாளர்கள் மட்டுமல்ல அரச உத்தியோகத்தர்களும் கூட பொருட்களின் அசுர விலையேற்றாத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இது மிகவும் கவலைக்குரிய நிலைமையாக மாறிக் கொண்டிருக்கின்றது. இலங்கை என்றாலே உலக நாடுகள் கதவை மூடுமளவுக்கு ஆட்சியாளர்கள் நமது நாட்டின் அந்தஸ்தைக் கொண்டு சென்று விட்டிருக்கின்றார்கள்.
என்னதான் எடுத்துச் சொன்னாலும் அது செவிடன் காதில் உதிய சங்காகத்தான் இருக்கிறது. அதனைக் கேட்கக் கூடிய நிலையில் ஆட்சியாளர்கள் இல்லை. மக்களுக்கு அநீதி இடம்பெறுகிறது. பல மாதங்களாக நமது மாதாந்த அமர்வுகளில் மக்கள் படும் துயரங்களைக் கதைத்துக் கதைத்துப் புளித்து விட்டது” என்றார்.
No comments: