மன்னார் நகர பகுதியில் உள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மக்களின் மோட்டார் வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்படாமையால் பதற்ற நிலை ஏற்பட்டது.
இன்று வியாழக்கிழமை மதியம், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கையிருப்பில் இருந்த எரிபொருள் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் படையினருக்கு வழங்கப்பட்டு வந்தது. எனினும் மக்களுக்கு வழங்கப்பட வில்லை.
அவசர தேவை கருதி மோட்டார் வாகனங்களில் எரி பொருளை பெற்றுக் கொள்ள சென்றவர்களுக்கு எரிபொருள் வழங்கவில்லை. இதனால் அங்கு கூடிய மக்களுக்கும் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் கடமையாற்றுகின்றவர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.
இதன் போது சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். எனினும் அங்கு கூடிய மக்கள் எரிபொருளை கேட்டு தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் மக்களுடன் கலந்துரையாடியதுடன், கையிருப்பில் உள்ள எரிபொருளை வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய் வீதம் பெற்றோல் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
No comments: