News Just In

3/07/2022 06:53:00 AM

ராஜபக்ஷர்களிற்கு சவால் விடும் ஹிருணிகா!

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்ல வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக எம்மை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்;துள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சுபவர்கள் அல்ல. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பலவீனத்தினாலேயே இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

ஆரம்ப காலங்களைப் போன்று அச்சுறுத்தல்களால் ராஜபக்ஷக்களால் எதனையும் சாதிக்க முடியாது என்பதை நாம் காண்பித்துள்ளோம்.

எனவே எதிர்வரும் காலங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கான தீர்வினை பெற்றுக் கொள்வதற்காக அந்தந்த துறையுடன் தொடர்புடையவர்களின் இல்லங்களை முற்றுகையிடுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , எரிபொருள் நெருக்கடியின் காரணமாக தொழிலுக்கு செல்வோர் மற்றும் மாணவர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு டொலர் நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களுக்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வாறு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தீர்வினைக் கோரியே ஜனாதிபதியின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோம். இதன் போது ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமெனக் கூறிய போது அவர் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளதாகக் கூறினர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக எம்மை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை.

சிறந்தவொரு அரசியல் தலைவர் என்பவர் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளக் கூடியவராகவே இருக்க வேண்டும். மாறாக விமர்சனங்களுக்கு அஞ்சி கோபம் கொள்பவர்களும், ஆயுதம் ஏந்துபவர்களும் சிறந்த தலைவர்களாக இருக்க முடியாது.

புலிகளுடன் நேருக்கு நேர் மோதியதாகக் கூறப்படும் , இராணுவ வீரரான ஜனாதிபதி பெண்களான எம்மை கண்டு அஞ்சுவது ஏன்? இவ்வாறு பெண்களுக்கு அஞ்சி ஓடி ஒழிந்து கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

ராஜபக்ஷர்களின் அச்சுறுத்தல்களால் எதனையும் சாதிக்க முடியாது என்பதை பெண்களான நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்துள்ளோம்.

ஜனாதிபதியின் வீட்டை மாத்திரமின்றி மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர்களின் வீட்டையும் சுற்றிவளைக்குமாறு வலியுறுத்துகின்றோம். இது ராஜபக்ஷக்களின் நாடு அல்ல. அவர்கள் வெறும் வர்த்தகர்கள் மாத்திரமே.

அவர்களுக்கு தேவையானவற்றைப் பெற்றுக் கொண்டு அமெரிக்காவிற்கு தப்பிச் சென்று விடுவர். ஆனால் நாம் எங்கு செல்வது? இது எமது நாடு. ராஜபக்ஷர்களிடமிருந்து இந்நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

No comments: