News Just In

3/06/2022 06:37:00 PM

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.மன்சூருக்கு சாய்ந்தமருது போரத்தினால் பாராட்டு!

கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.மன்சூரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது போரத்தின் ஏற்பாட்டில் இன்று (06) ஞாயிற்றுக் கிழமை அல்-ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தருமான எம்.எம். உதுமா லெவ்வை தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும், பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கெளரவ அதிதிகளாகவும் அம்பாறை மாவட்ட சமூர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்ராஸ், சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் ஏ.ஹிபத்துல் கரீம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் செயலாளர் ஐ.எல்.எம். மன்ஸூர், சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ. பரீட், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் மற்றும் சாய்ந்தமருது உட்பட அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதி பிரதம செயலாளர் ஏ.மன்சூர் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக சேவையாற்றியதை நினைவு கூர்ந்தும் தற்போது உயர் பதவியொன்றிக்கு நியமனம் பெற்றதையிட்டும் சாய்ந்தமருது போரம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர்கள் சங்கம், சிலோன் மீடியா போரம், அல்-அமானா நற்பணி மன்றம் ஆகிய அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம், நினைவுப் பரிசு என்பன வழங்கி கெளரவிக்கவுள்ளன. இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அஸ்ஹர் இப்ராஹிம், நூருள் ஹுதா உமர், பைஸால் இஸ்மாயில்)

No comments: