News Just In

3/07/2022 08:02:00 PM

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நியாயம் வேண்டி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கவன ஈர்ப்புப் போராட்டம்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நியாயம் கிடைக்க சர்வதேசம் தலையிட வலியுறுத்தி இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் ஒன்றுகூடிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி வரையில் சென்று அங்கு கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் மற்றும் கோறளைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் குணசேகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலைசெய், தமிழினப் படுகொலைக்கான சர்வதேச நீதி,பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக காந்திபூங்காவில் பெருமளவான காவல்துறையினரும் புலனாய்வுத்துறையினரும் குவிக்கப்பட்டிருந்ததுடன் பெருமளவானோர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். எங்கே எங்கே எமது குழந்தைகள் எங்கே, ஐ.நாவே நாம் அழுவது உமக்கு கேட்கவில்லையா?, சர்வதேசமே நீதியைப்பெற்றுத்தா?, குடும்பம், குடும்பமாக ஒப்படைக்கப்பட்ட சிறார்கள் எங்கே?, சிறுவர்களைக் கடத்திவிட்டு அரசே சிறுவர் உரிமை பற்றிப் பேசாதே, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை மறக்கமாட்டோம் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.







No comments: