News Just In

2/02/2022 05:31:00 PM

தேடப்பட்டடு வந்த ஓட்டமாவடி மாணவன் வவுனியாவில் கண்டுபிடிப்பு


(எச்.எம்.எம்.பர்ஸான்)
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் எனும் மாணவன் கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்ற நிலையில் வீடு திரும்பாததால் பெற்றோர் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தனர்.
இவ்வாறு காணாமல் போன மாணவன் சென்ற சைக்கிளும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணி போன்றவைகள் கடந்த 29 ஆம் திகதி பாசிக்குடா - கல்மலை கடலோரம் கண்டெடுக்கப்பட்டது.

மாணவனின் பொருட்களை கண்டு கொண்ட பெற்றோரும், பிரதேச மக்களும் மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் கடும் பிரயத்தனம் எடுத்து மாணவனை தேடி ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.மர்மமான முறையில் காணாமல் போன மாணவனை கண்டுபிடிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், மாணவன் வீட்டை விட்டு வெளியேறும் போது சில ஆடைகளையும், அவரிடமிருந்த சிறிதளவு பணத்தையும், தேசிய அடையாள அட்டை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவைகளை எடுத்துச் சென்றுள்ள விடயம் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.


இந்நிலையில், மாணவனின் வட்ஸ் அப் ஒன்லைன் காட்டிய போது மாணவனுக்கு மெஸேஜ் அனுப்பப்படுகின்ற போது அதனை பார்த்து விட்டு மெஸேஜ் அனுப்பப்படும் இலக்கங்கள் புலொக் பண்ணப்பட்டு வந்தது.
இவ்வாறான விடயங்களை அவதானித்த பொலிஸார் மாணவன் எங்கேயோ தலைமறைவாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

காணாமல் போன மாணவனை பொலிஸார் ஐந்து நாட்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (1) மாலை வவுனியா பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாகவே தான் வீட்டை விட்டு வெளியாகியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது மாணவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.

பெற்றோரை திசை திருப்பவே மாணவன் கடலோரம் சைக்கிளையும் அணிந்திருந்த சேர்ட்டையும் வைத்து விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் வவுனியா சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உயர் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்று வரும் இம் மாணவன் கடந்த கபொ.த. சாதாரண தரத்தில் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளான்.
கண்டுபிடிக்கப்பட்ட மாணவனை பொலிஸார் பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: