News Just In

2/01/2022 03:02:00 PM

பொலிசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு - ஒருவர் படுகாயம் ; இரு தேரர்கள் உட்பட மூவர் கைது!



அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் பதுங்கியிருந்த நிலையில், அவர்களை மடக்கிபிடிக்க முற்பட்டபோது அவர்கள் மீது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் கொள்ளையர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தேரர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்துள்ளதுடன் ஏனையவர்கள் தப்பி ஓடியுள்ள சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



அக்கரைப்பற்றில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 3 வீடுகள் உடைத்து சுமார் 30 பவுண் தாலிக் கொடிகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள், தொடர் கொள்ளையாக டிசம்பர் 18ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் நீதவான் ஒருவரின் வீட்டை உடைத்து 12 பவுண் தங்க நகையை கொள்ளையிட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து நீதவான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் ஏனைய கொள்ளை சம்பவங்கள் தொடர்பான கொள்ளையர்களை கைது செய்வதற்காக 4 விசேட பிரிவுகளை கொண்ட பொலிஸ் குழுவை அமைத்து கொள்ளையர்களை பொலிசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில் காரைதீவு வெட்டுவாய்கால் பகுதியில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக சம்பவதினமான நேற்று இரவு 10 மணிக்கு, பொலிஸ் குழுவிற்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய சப் இன்பெக்கடர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த பகுதியை முற்றுகையிட்டனர்.

இதன் போது இரு தேரர்கள் கொள்ளையர்களுடன் பேசிக் கொண்டிருந்த போது பிரதான கொள்ளையரை பொலிசார் மடக்கி பிடித்த நிலையில், பொலிசார் மீது கொள்ளையர்கள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டபோது அது குறிதவறி பொலிசார் மடக்கிபிடித்த பிரதான சூத்திரதாரியான கொள்ளையர் மீது பட்டதையடுத்து அவர் படுகாயமடைந்தார், இதையடுத்து அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளதையடுத்து 5 கிராம் ஜஸ் போதை பொருளுடன் படுகாயமடைந்த கொள்ளையர் உட்பட இரு பௌத்த தேரர்களுடன் 3 பேரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட பௌத்த தேர்கள் தமன விகாரையைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இந்த கொள்ளையர்களுடன் சேர்ந்து புதையல் தோண்டும் நடவடிக்கையில் நீண்ட காலமாக ஈடுபட்டுவந்த நிலையில் நேற்று இரவு கொள்ளையர்களை சந்திப்பதற்காக இருவரும் கார் ஒன்றில் வெட்டுவாய்கால் பகுதிக்கு சென்று காத்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது அங்கு பிரதான கொள்ளையனான அக்கிரம் மற்றும் மட்டக்களப்பைச் சோந்தவரும் திருக்கோவிலில், திருமணம் முடித்துள்ள சத்தியா ஆகிய இருவரும் மோட்டர்சைக்கிளில் சென்று காத்திருந்த தேரர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது அவர்களை பொலிசார் சுற்றிவளைத்து மடக்கி பிடிக்க முற்பட்டபோது பொலிசார் மீது சத்தியா என்பவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தேரர்களின் சாரதி ஆகிய இருவரும் தப்பி ஓடிள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.

இதில் கொள்ளையரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த கொள்ளையர் அக்கிரம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவனுடன் இரு தேரர்களை கைது செய்துள்ளதுடன் கார் ஒன்றும் மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை மற்றும் அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: