News Just In

1/05/2022 05:51:00 PM

நிரம்பி வழியும் குளங்கள் வீதியை ஊடறுக்கும் வெள்ளம், முதலைகளும் ஊடுருவல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த மழை புதன்கிழமை(05) காலையிலிருந்து சற்று குறைவடைந்துதுள்ளது. எனினும் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான சிறிய குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதையும், பெரிய குளங்கள் நிரம்பியுள்ள நிலையில் அவற்றின் வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதையும் சில வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதையும் அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் மாவட்டத்தின் வெல்லாவெளி, கோவில்போரதீவு, பழுகாமம், பொறுகாமம், பெரியபோரதீவு, கொக்கட்டிச்சோலை, எருவில், களுவாஞ்சிகுடி, குருமண்வெளி, களுதாவளை, தேத்தாத்தீவு, உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சிறிய குளங்கள் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிகின்றது.

குளங்கள் நிரம்பி வழிந்து நேரடியாக மட்டக்களப்பு வாவியைச் சென்றடைவதனால் வாவியிலிருந்து முதலைகளும் குளங்களை நேக்கி வருகின்றன. இவ்வாறு வரும் முதலைகள் கிராமங்களுக்குள்ளும் உட்புகும்
சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் உன்னிச்சைக்குளத்தின் நீர்மட்டம் 30அடி ஒரு அங்குலமாகவும், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 15அடி 6ஆங்குலமாகவும், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 18 ஆகவும், கட்டுமுறிவுக்குளத்தின் நீர்மட்டம் 11அடி 9அங்குலமாகவும் அக்குளத்தில் 3 மேலதிக நீர் வெளியேறுகின்றது, கித்துள்வெவக்குளத்தின் நீர்மட்டம் 8அடி ஒரு அங்குலமாகவும், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 15அடி 3அங்குலமாக உயர்ந்துள்ளதுடன் அக்குளத்தில் 4 வான்கதவுகள் 2அடி உயரத்தில் திறந்துவிடப்பட்டுள்ளன, வடமுனைக்குளம் 12அடி 7அங்குலம், இக்குளத்தில் ஒரு அடி நீர் வெளியேறிக் கொண்டிருக்கின்றது.

அதுபோல் நவகிரிக்குளத்தின் நீர்மட்டம் 30அடியாகவும் அக்குளத்தின் 2வான்கதவுகள் 1அடி 6அங்குலம் உயரத்தில் திறந்து விடப்பட்டுள்ளதாகவும், தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 16அடி ஒரு அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மண்டூர் - வெல்லவெளி வீதியில் இரு இடங்களிலும், காக்காச்சுவட்டை – சின்னவத்தை வீதி, றாணமடு – மாலையர்கட்டு வீதி, கிரான் - புலிபாய்ந்தகல் வீதி, சித்தாண்டி - ஈரளக்குளம் பிரதான வீதி உள்ளிட்ட பல வீதிகளை ஊடறுத்து வெள்ள நீர் பாய்வதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் மக்கள் மிகுந்த சிரமங்களை மக்கள் எதிர் கொண்டு வருகின்றனர்.

புதன்கிழமை(05) காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நவகிரிப்பகுதியில் 72மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும், தும்பங்கேணிப் பகுதியில் 47மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உன்னிச்சைப் பகுதியில் 44மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், உறுகாமம் பகுதியில் 17.1மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வாகனேரிப் பகுதியில் 7.8மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாவட்டத்தின், தாழ் நிரப் பகுதியில் தேங்கியுள்ள வெள்ளநீர் வெளியேற முடியாமல் தேங்கியுள்ளதனால் அப்பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களையும் எதிர்கொண்டு வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

.எச்.ஹுஸைன்





No comments: