News Just In

1/03/2022 06:11:00 AM

ஐக்கிய சமூக சேவைகள் நலன்புரி அமைப்பின் கூட்டம் : நாட்டுநடப்புக்களை பெண்களுக்கு விளக்கிய சமூக செயற்பாட்டாளர்கள்




ஐக்கிய சமூக சேவைகள் நலன்புரி அமைப்பின் பொதுக்கூட்டமும், பிரதேச அபிவிருத்தி மேம்பாடுகள் தொடர்பிலும், வாழ்வாதார விடயங்கள் தொடர்பிலும் ஆராயும் கலந்துரையாடலும் நலன்புரி அமைப்பின் ஸ்தாபக தலைவரும், காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம். பஸ்மீரின் தலைமையில் மாளிகைக்காடு கமு/ கமு/ அல்- ஹுசைன் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் தில்சாத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைப்பின் ஸ்தாபக தலைவரும், காரைதீவு பிரதேச சபை உறுப்பினருமான ஏ.ஆர்.எம். பஸ்மீர், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளரும், கிழக்கு மாகாண கணனி தொழிநுட்ப பேரவையின் பணிப்பாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், சமூக நல செயற்பாட்டாளர் செயின் முஹம்மட் சக்கி ஆகியோர் கலந்து கொண்டு காரைதீவு பிரதேச சபையில் நடைபெறும் அநீதிகள், தவிசாளரின் இனவாத போக்குகள், அபிவிருத்தி மற்றும் உரிமை சார்ந்த விடயங்களில் நடைபெறும் பாரபட்ச தன்மைகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கினர்.

மேலும் வடக்கு கிழக்கு இணைப்பை வலியுறுத்தும் 13 வது திருத்தம் தொடர்பில் தமிழ் பேசும் கட்சிகள் முன்னெடுக்கும் விடயதானங்களின் போது ரகசியம் பேணப்பட்டுவருவதனால் மக்களுக்கு இருக்கும் சந்தேக நிலைகள் தொடர்பிலும், கடந்த காலங்களில் வடகிழக்கு இணைப்பின் பின்னர் கிழக்கில் வாழ்ந்த தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வியல் நிலைகள் தொடர்பிலும் கருத்துரைத்ததுடன் முஸ்லிம் கட்சிகளின் போக்குகளில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சமகால பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. அரசினால் வழங்கப்படவுள்ள நான்கு மில்லியன் ரூபாய் வேலைத்திட்டம் தொடர்பிலும் இங்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம். பஸ்மீர் பொதுமக்களுக்கு விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் ஐக்கிய சமூக சேவைகள் நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் எம்.எம்.றிஜ்மீர், ஐக்கிய சமூக சேவைகள் நலன்புரி அமைப்பின் முக்கிய நிர்வாகிகள், மாளிகைக்காடு மேற்கு வட்டார பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மாளிகைக்காடு நிருபர்



No comments: