கடன் சான்று பத்திரத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலரை மக்கள் வங்கி செலுத்தியுள்ளது.
சீன உர நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்துவதை இடைநிறுத்தி கொழும்பு வணிக மேல் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு 48 மணித்தியாலங்களின் பின்னர் இன்று இந்த தொகை குறித்த நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.கிங்டாவோ சீவின் பயோடெக் (Qingdao Seawin Biotech Group Co., Ltd) நிறுவனத்திற்கு மேற்குறிப்பிட்ட 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சேதன பசளையில் , அபாயம் மிக்க பற்றீரியா காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அந்த உரத்தை தரையிறக்கும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட்டது.அதனைத் தொடர்ந்து சீனாவிலிருந்து புதிய உரத்தை இறக்குமதி செய்வதையும் அரசாங்கம் நிராகரித்தது.
இதன் பிரதிபலனாக கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையிலுள்ள சீன தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தினால் மக்கள் வங்கி கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டது.
சீன உர நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் கடன் சான்று பத்திரத்தை வெளியிட்டதாகத் தெரிவித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
No comments: