News Just In

12/25/2021 07:46:00 PM

ஏழு மலையானை வணங்கும் நீங்கள் நியாயமாக நடந்துகொள்கின்றீர்களா? - மகிந்தவிடம் மனோ கேள்வி!




"எடுத்தற்கெல்லாம் திருப்பதி ஏழு மலையானை மனைவி, பிள்ளை குட்டிகளுடன் நாடும் நீங்கள், ஏழு மலையானை வணங்கும் இந்நாட்டு இந்துக்களுக்கு நியாயமாக நடந்து கொள்கின்றீர்களா?" என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மகிந்த தனது மனைவி மற்றும் இளைய மகன் குடும்பத்தினருடன் திருப்பதி ஏழு மலையானை நேற்று முன்தினம் வழிப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் தனது சமூக ஊடகத் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள மனோ எம்.பி,

"நல்லதுதான். எங்கள் கடவுள் எங்களுக்கு மட்டுமே என்று எழுதி எதுவும் கொடுக்கப்படவில்லை. நாங்களும் அப்படி நினைப்பதும் இல்லை.
எங்கள் மனங்களும் எங்கள் மதத்தைப் போல் பரந்த விசாலமானதுதான். ஆனால் புரிபடாதது, ஒன்றுதான்.எடுத்தற்கெல்லாம் ஏழு மலையானை மனைவி, பிள்ளை குட்டிகளுடன் நாடும் நீங்கள், ஏழு மலையானை வணங்கும் இந்நாட்டு இந்துக்களுக்கு நியாயமாக நடந்துகொள்கின்றீர்களா?

இந்துக்களைச் சரிசமமாக நடத்துகிறீர்களா? இந்தக் கேள்விகளை உங்கள் மனச்சாட்சி உங்களிடம் கேட்கவே கேட்காதா? மிஸ்டர் பிரைம் மினிஸ்டர்..!" என குறிப்பிட்டுள்ளார்.

No comments: