News Just In

12/23/2021 08:27:00 PM

முதுநிலை ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் வளம்மிகு மண்டூர்நூல் அரங்கேற்றம்!

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வெளியீடான முதுநிலை ஊடகவியலாளர் இ.பாக்கியராசாவின் வளம்மிகு மண்டூர் நூல் அரங்கேற்றம் ஜனவரி மாதம் 2ம் திகதி காலை 9.30 மணிக்கு கல்லடியிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மேற்படி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பேராசிரியர் ப. சந்திரசேகரம் அரங்கில் பேராசிரியர் செ. யோகராசா தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷ்ஜானந்தா ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பிக்க , கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் வைத்திய நிபுணர் வே. விவேகானந்தராசா பிரதம விருந்தினராகவும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ.இராகுலநாயகி சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிப்பர்.

மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம், அக வணக்கம் ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியையும் சிட்னி–அவுஸ்திரேலியா சுருதி லயா அக்கடமி தாபகரும் ஆசிரியையுமான திருமதி. மாலதி சிவசீலனின் தமிழ் வாழ்த்து மேற்படி சுவாமியின் ஆசியுரை மட்டக்களப்பு காந்தி சேவா சங்க பொதுச் செயலாளர் கதிர் பாரதிதாசனின் வரவேற்புரை, கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவர் இ. தேவஅதிரனின் வெளியீட்டுரை, கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் அருட்பணி அ.அ. நவரெத்தினம் அடிகளின் ஆய்வுரை என்பன இடம்பெறும்.

ஸ்ரீமத் சுவாமி தக்ஷஜானந்தா நூலின் முதற் பிரதியை அவுஸ்திரேலியா வைத்திய கலாநிதி தி. சிவசீலனுக்கு வழங்கி நூலை அரங்கேற்றி வைப்பார். வைத்திய கலாநிதி தி. சிவசீலனின் கருத்துரை, பிரதம விருந்தினர் உரை, சிறப்பு விருந்தினர் உரைகளை அடுத்து நூலாசிரியரின் பதிலுரை மற்றும் நன்றி நவிலலுடன் வளம்மிகு மண்டூர் நூலின் அரங்கேற்றம் நிறைவு பெறும். மண்டூர் நலன் விரும்பிகள் ஒன்றியத்தின் செயலாளர் கு. ஜதீஸ்குமார் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்.

.எச்.ஹுஸைன்


No comments: