News Just In

12/29/2021 01:03:00 PM

சௌபாக்கிய திட்டத்தின் கீழ் பயிர் செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட பயறுகள் அரசாங்கத்தினால் கொள்முதல்



நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவாகிய சுபீட்சத்தின் நோக்கு சௌபாக்கிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இறக்குமதி விவசாய தானியப் பயிர் செய்கை மூலம் செய்கை பண்ணப்பட்டு இறக்காமம் பிரதேசத்தில் அறுவடை செய்யப்பட்ட பயறுகள் அரசாங்கத்தினால் மானிய விலையில் கொள்முதல் செய்யப்பட்டது.

இந்நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் (நளீமி) யின் தலைமையில் செவ்வாய் கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. இறக்காமம் பிரதேசத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மேற்குறித்த இறக்குமதி தானியப் பயிர் செய்கையில் ஒன்றான பயறு தானியம் பயிர் செய்கை முதற்கட்டமாக செய்கை பண்ணப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தள்ளப்பட்ட பிரதேசமாக காணப்பட்ட நிலையினை கருத்தில் கொண்டு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக இத்திட்டம் இறக்காமம் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளினால் பிரதேச விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தின் வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்பட்டது.


குறித்த திட்டமானது ஜனாதிபதியின் எண்ணக் கருவில் உருவாகி ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ அவர்களின் நேரடி ஆலோசனையில் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த பயறு அறுவடைகளை கொள்முதல் செய்யும் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸார், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், பிரதேச விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எம் அஸ்ஹர் உட்பட விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய அமைச்சிக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்





No comments: