News Just In

10/22/2021 06:27:00 PM

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக வெள்ளி விழா நாளை (23) !


இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவினை கொண்டாடுவதற்கான முன்னெடுப்புகளை உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இவ்விழாவினை பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நினைவு தினத்துடன் இணைந்து கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 23ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் மாநாட்டு மண்டபத்தில் கொவிட் 19 சுகாதார வழிகாட்டல்களுக்கிணங்க இவ்விழா இடம்பெறவுள்ளது.

1996ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து இன்றுவரை பல்வேறு அடைவுகளை இப்பல்கலைக்கழகம் எட்டியுள்ளது. கலை கலாசார பீடம் மற்றும் முகாமைத்துவ வர்த்தக பீடம் ஆகிய இரண்டு பீடங்களுடன் ஆரம்பித்த இப்பல்கலைக்கழகம் அவற்றுடன் பிரயோக விஞ்ஞான பீடம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம், பொறியியல் பீடம், தொழில்நுட்ப பீடம் என மொத்தமாக 6 பீடங்களுடன் தற்போது இயங்கி வருகின்றது. 25 ஆண்டு கால வரலாற்றில் ஸ்தாபகத் தலைவரின் கனவுகளின் அடைவை மீட்டிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பமாக இவ்வெள்ளி விழா அமைந்திருக்கிறது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர், பதிவாளர் மற்றும் நிதியாளர் என்போர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

21ஆம் திகதி மு.ப 7.30 மணிக்கு மரநடுகை முதலாவது நிகழ்வாக இடம்பெற்றதுடன் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் அனைத்தும் மு.ப 10 மணியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அந்தவகையில் மத அனுஷ்டானம் மற்றும் தேசிய கீதம் இசைக்கப்படுவதைத் தொடர்ந்து, பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் அவர்களின் வரவேற்புரை இடம்பெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் ஸ்தாபக உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் அவர்களின் சிறப்புரை இடம்பெறவுள்ளதுடன் ஸ்தாபக பதிவாளர் ஏ.எல். ஜௌபர் சாதிக் மற்றும் ஸ்தாபக நிதியாளர் குலாம் றசீத் அவர்களும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25 ஆண்டுவிழா தொடர்பான உரையை பேராசிரியர் எம்.ஏ.எம். றமீஸ் நிகழ்த்துகின்றமை மேலும் இந்நிகழ்வை மெருகூட்டவுள்ளது.

இன்னும் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழாவிற்கான நினைவு மலர் வெளியிடப்படவுள்ளது. இந்நினைவு மலரை அதன் பதிப்பாளரும் பல்கலைக்கழக நூலகருமான எம்.எம். றிபாயுடீன் அறிமுகப்படுத்தவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து உபவேந்தர் விருதுகள் மற்றும் நீண்டகால சேவைக்கான விருதுகள் என்பன வழங்கப்படவுள்ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் ஸ்தாபகர் தினம் தொடர்பான இந்நிகழ்வின் முதன்மைப் பேச்சை வைத்தியர் எம்.எச்.எம். ஜெஸீம் அவர்கள் இணையவழி ஊடாக நிகழ்த்தவுள்ளமை சிறப்பிற்குரியதாகும். இவர் ஸ்தாபகத் தவைரின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நூல்கள் அன்பளிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதும் இவ்வெள்ளி விழாவை மேலும் சிறப்படையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் பற்றிய ஆவண குறும்பட வெளியீடும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த நிகழ்வாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் அவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த உபவேந்தர் உரை இடம்பெறவுள்ளது. ஸ்தாபகத் தலைவர் கலாநிதி எம்.எச்.எம். அஷ்ரப் அர்களின் இப்பல்கலைக்கழகம் பற்றிய தூரநோக்கில் இன்னும் அடையப்பட வேண்டிய இலக்குகளைக் கவனத்திற்குக் கொண்டு வருவதாக இவ்வுரை அமையுள்ளது. இறுதியாக நன்றியுரை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எச். அப்துல் சத்தார் அவர்கள் வழங்குவதைத் தொடர்ந்து பி.ப 12.50 மணியளவில் விழா இனிதே நிறைவுபெறவுள்ளது.

நூருல் ஹுதா உமர்



No comments: