News Just In

9/16/2021 06:17:00 PM

​வீதி புனரமைப்பு என்ற போர்வையில் மட்டு.சந்தனமடு ஆற்றில் சட்டவிரோத மண் அகழ்வு- களத்தில் இறங்கினார் சாணக்கியன்...!!


மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட சந்தனமடு ஆற்றில் இருந்து சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் வழங்கிய புகாரையிட்டு அதனை பார்வையிட இன்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறித்த பிரதேசதிற்கு அப்பகுதி மக்கள், விவசாய அமைப்புக்கள் சகிதம் இன்று(16.09.2021) சென்றார்.


அவ்விடத்திற்கு சென்று மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், பிரதேச சபை தவிசாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபை, நீர்ப்பாசன பொறியியலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வீதி புனரமைப்பிற்கு ஏதாவது அனுமதி வழங்கியதா? என வினவிய போது அவர்கள் அனைவரும் எதுவிதமான அனுமதியும் வழங்கப்படவில்லை என தெரிவித்தனர்.

ஆகவே இந்த மண் அழ்வானது முற்றுமுழுதாக சட்டவிரோதமாக இடம்பெறுகின்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பகுதி மக்கள் தனியார் ஒப்பந்தகாரர் மீதே விரல் நீட்டுகின்றனர். நாங்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் இல்லை, ஆனால் வீதி புனரமைப்பு என்ற போர்வையியல் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெறுகின்றது. குறுகிய காலத்தில் முடிக்க கூடிய வீதி புனரமைப்பினை கூடிய காலத்திற்கு செய்து அதன்மூலம் மண் அகழ்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்படியான மண் பிரச்சினை ஒன்று உள்ளதை மாவட்ட செயலாளர் மற்றும் அபிவிருத்தி குழு இணைத்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு இது தொடர்பாக அப்பகுதி மக்களுக்கு சிறந்ந தீர்வினை வழங்கி அப்பகுதியினை மண் மாபியாக்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். மாவட்ட குழு இணைத்தலைவர் பொலிசாருக்கு அறிவித்து உடனடியாக மண்மாபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த பாராளுமன்ற அமர்வின் போது மாலைதீவிற்கு மண் ஏற்றுமதி செய்யப்படுவதாக நான் கூறிய போது அதனை குறித்த விடயதான அமைச்சர் அதனை நிரூபித்தால் நான் பதவி விலகுவேன் என தெரிவித்தார். ஆனால் மாலைதீவிற்கு மண் அனுப்பப்படுவதை புவிச்சரிதவியல் பணியகம் உறுப்படுத்தியுள்ளது. ஆகவே நான் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சாத்திரம் சொல்பவரைப்போல் இவற்றை எல்லாம் கண்டுபிடித்து சொல்ல வேண்டி உள்ளது எனவும், இங்கிருந்து மண் அகழ்வில் ஈடுநட்டவர்கள் உடனடியாக இந்த பகுதியை நிரப்பி கொடுப்பதுடன், அழிக்கபப்பட்ட பனம் கன்றுகளை நடுவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக செய்ய வேண்டும். இல்லாவிடின் மக்கள் வீதிக்கு இறங்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.



No comments: