மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்திற்கு கடத்தப்படவிருந்த ஐயாயிரம் போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனையாளரும் போதை வியாபாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹா சக்தி வீதி, நாவற்காடு, அக்கரைப்பற்று எனும் முகவரியிலுள்ள வீட்டில் வைத்து போதை மாத்திரைகளுடன் மருந்து விற்பனை முகவரும், போதை மாத்திரை வியாபாரியும் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
36 வயதுடைய மருந்து விற்பனை முகவர் மஹா சக்தி வீதி, நாவற்காடு, அக்கரைப்பற்று எனும் முகவரியையும், 37 வயதுடைய போதை வியாபாரி சென்னெல் கிராமம், சாய்ந்தமருதையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்து விற்பனையாளரும் போதை வியாபாரியும் போதை மாத்திரைகளை கணக்கிட்டு கல்குடா பிரதேசத்திற்கு கடத்தவிருந்த நிலையிலேயே மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து ஐயாயிரம் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பெருந்தொகை போதை மாத்திரைகள் கல்குடாவுக்கு கடத்தப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனையிலிருந்து விரைந்த காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சம்மாந்துறை விஷேட அதிரடிப்படையினரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
No comments: