News Just In

8/01/2021 01:03:00 PM

மாவட்டமும், மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கதைத்தால் நாங்கள் குழப்பவாதிகள்- பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!!


மயிலத்தமடு மாதவணை பிரச்சினைக்கு தீர்வில்லை, கெவிலியாமடு பிரச்சினைக்குத் தீர்மானமில்லை, மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் காணிக்கு அம்பாறை அரச அதிபரின் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பில் எவ்வித கருத்தும் இல்லை. திவுலபொத்தான என்று பதிதாக கிராமத்தை உள்வாங்குமாறு ஆளுநர் கொடுக்கும் அழுத்தம் தொடர்பில் எந்தக் கருத்தும் இல்லை. பூரணப்படுத்தப்படாமல் இருக்கும் வீட்டுத் திட்டங்களைப் பூரணப்படுத்தும் விதமாக எவ்வித திர்மானங்களும் இல்லை, இவ்வாறு மாவட்டத்திற்கு மிகவும் பாதகமான விடயங்கள் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. இதைப்பற்றியெல்லாம் நாங்கள் கேட்கப் போனால் நாங்கள் குழப்பவாதிகள் என்கிறார்கள்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்ட விடயங்கள் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தான் அபிவிருத்திக் குழக் கூட்டத்திற்கு ஊடகங்களுக்கு அழைப்பில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழக் கூட்டத்தில் ஊடக சுதந்திரமானது இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். சுமார் நான்கு மணிநேரம் நடக்கும் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தை வெறுமனே நான்கு நிமிடங்கள் நடாத்தும் ஊடக சந்திப்பின் மூலம் தெளிவுபடுத்த முடியுமா?

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எத்தனையோ தலைப்புகளில் விடயங்கள் பேசப்படுகின்றன. நாங்கள் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்சார்ந்த விடயங்களை சொல்வதற்கு அங்கு செல்லவில்லை. எமது மாவட்டம் சார்ந்த, மக்கள் சார்ந்த விடயங்களைக் கலந்துரையாடுவதற்காகவே அங்கு செல்கின்றோம்.

பல்வேறு விடயங்கள் அங்கு கலந்துiயாடப்பட்டன. பல கருத்து முரண்பாடுகளும் இடம்பெற்றன. மாவட்டத்திற்கு மிகவும் பாதகமான விடயங்கள் அங்கு கொண்டுவரப்பட்டு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

மாவட்ட அபிவிருத்திக் குழக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களில் மூவர் அரசோடு இணைந்தவர்கள். கௌரவ நசீர் அகமட் அவர்களை ஓட்டமாவடி பிரதேசசபைத் தவிசாளர் அவர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழவின் கௌரவ இணைத்தலைவர் என்று தான் விழித்திருந்தார். ஆனால் நாங்கள் அறிந்த வகையில் மட்டக்களபப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு இரண்டு இணைத்தலைவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பிள்ளையான் அவர்களும் கௌரவ ஆளுநர் அவர்களுமே. ஆனால் அங்கு நசீர் அகமட் அவர்களும் கௌரவ இணைத்தலைவர் என்று விழிக்கப்பட்டிருந்தார்.

வழமையாக மாவவட்ட அபபிவிருத்திக் குழக் கூட்டத்திலே முன்வரிசையில் தான் எங்களுக்கு ஆசனங்கள் இருக்கும். ஆனால் அன்றைய தினம் அதிசயமாக முதன்மை இருக்கைகளில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏன் இன்னொருவர் புதிதாக அபிவிருத்திக் குழுவின்இணைத்தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருப்பதை மக்கள் அவதானித்து விடக் கூடாது என்பதற்காகவே அவ்வாறான நடைமுறை செயற்படுத்தப்பட்டிருக்கின்றது.

அன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த நாங்கள் இருவரும் சிறுபான்மையாக இருந்தோம். ஏனெனில் ஐந்தில் முன்று பேர் அரசாங்கத்தோடு சேர்ந்தவர்கள். மூன்ற பேரும் தமிழ் மக்களுக்குப் பாதகமான விடயங்கள் வந்தால் அரசுக்கு ஆதரவானவர்கள் என்பதால் அமைதியாக இருப்பார்கள். ஊடகமும் அந்த இடத்தில் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்.

கடந்த காலத்திலே உண்மையிலே ஊடகங்கள்தான் இந்த மாவட்டத்திலே நிறைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பக்கபலமாக இருந்தன. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே நடக்கும் சில குழறுபடிகளையும் மாவட்ட மக்களுக்கு வெளிக்கொண்டு வந்தன.

ஊடகங்களுக்கு அனுமதி கொடுக்கப்படாத விடயம் தொடர்பில் நான் மாவட்ட செயலகங்களுக்குரிய அமைச்சின் செயலாளரிடம் கேட்டிருந்தேன். அவ்வாறு எந்த இடத்திலும் அனுமதி மறுக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். ஏனைய எந்த மாவட்டத்திலும். ஊடகங்கள் இல்லாமல் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெறவில்லை. எமது மாவட்டத்திலும் கடந்த காலங்களில் அவ்வாறுதான் இடம்பெற்றது. ஆனால் இப்போதுதான் ஊடகங்கள் மறுக்கப்படுகின்றன.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலே மாவட்டத்திற்கும் மக்களுக்கும் பாதமகமான சில விடயங்கள் நடக்கும் போது நாங்கள் அதனை எதிர்த்து கருத்து வெளியிட்டாலும் அது மக்களுக்குத் தெரியாது.

மயிலத்தமடு மாதவணை மேய்ச்சற்தரையிலே நீதிமன்றத்தால் கொடுத்த தடையுத்தரவை மீறி கிழக்கு மாகாண ஆளுநரின் பின்புலத்தில் மீண்டும் 2021ம் ஆண்டு பெரும்போகத்திற்கு விவசாயம் செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பில் நாங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்குத் தெரியப்படுத்தினோம். நீதிமன்றத் தடையுத்தரவை வைத்து இதனை பொலிஸாருக்கு அறிவித்து ஏன் தடுக்க முடியாது? என்று கேட்டிருந்தோம். அதற்கு ஒழுங்கான பதில் வழங்கப்படவில்லை.

ஏன், இவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் முட்டி மோதமாட்டார்கள். நமது பண்ணையாளர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்யவும் முன்வர மாட்டார்கள்.

கெவிலியாமடு பிரதேசத்திலே வனஇலாகாவிற்குச் சொந்தமான காணியில் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் மரமுந்திரிகைச் செய்கை இடம்பெறுகின்றது. இது தொடர்பில் நாங்கள் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவித்த போது வன இலாகாவிற்கு எவ்வித முறைப்பாடுகளும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர். எனவே இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்து சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சொல்லி வனஇலாகாவிற்குத் தெரிவித்தால் அவர்கள் அதனைத் தடுத்து நிறுத்த முடியும். இந்த விடயத்திற்கும் எவ்வித பதிலும் இல்லை.

நமது மாவட்டத்தின் எல்லையிலே கடந்த ஆட்சியின் போது கட்டப்பட்டு பூரணப்படுத்தப்படாத நிலையில் உள்ள வீடுகளைப் பூரணப்படுத்தித் தருமாறு உரிய அமைச்சரிடம் கேட்டபோது அதனை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று சொல்லியிருந்தார். ஆனால் புதிதாக 500 வீடுகள் வரப்போகின்றன அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டாம் என்று சென்னார். எமது மாவட்டத்திற்கு வீட்டுத் திட்டம் வந்தால் நாங்கள் ஏன் அதனை எதிர்க்கப்போகின்றோம். ஆனால் பிறகு விசாரித்த போது அவ்வீட்டுத் திட்டம் தேசிய இனவிகிதாசார அடிப்படையில் கொடுக்கப்போவதாக உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறிகின்றோம். இதன்படி பார்த்தால் 350க்கும் மேற்பட்ட வீடுகள் பெரும்பான்மை மக்களுக்கே சேரும். எனவே இவ்வீட்டுத் திட்டத்தை செய்யாமல் பூரணப்படுத்தப்படாமல் இருக்கும் விடுகளைப் பூரணப்படுத்தித் தாருங்கள் என்ற தீர்மானம் ஒன்றை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுப்போம் என்று தெரிவித்தால் நாங்கள் அரசியலுக்காகச் சொல்லும் விடயம் என்று சொல்லி தட்டிக் கழிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு அம்பாறை எல்லையில் கித்துள் பிரதேசத்தில் இருக்கும் மேய்ச்சற்தரைக் காணிக்குள் இராணுவத்தினரின் சூட்டுப் பயிற்சிக்காக காணியை வழங்கியிருக்கின்றார்கள். இதனை நாங்கள் கேட்ட போது மாவட்ட அரசாங்க அதிபர் சொல்கிறார் அப்பிரதேசத்தில் 75 வீதமான காணி அம்பாறைக்குரியதும், 25 வீதமான காணியே மட்டக்களப்பிற்குரியது என்பதனால் அவர்கள் அனுமதி கொடுத்திருக்கின்றார்கள் என்று.

இப்பிரதேசமானது அம்பாறையில் இருந்து சுமார் 03 கிலோமீட்டார்கள் எமது எல்லைக்குள் இருப்பது. எனவே எமது மாவட்ட எல்லைக்குள் வருகின்ற விடயத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி கொடுத்தால், இதனை நாங்கள் எற்றுக் கொள்வோமாக இருந்தால் இனிவரும் காலங்களில் அந்தப் பிரதேசங்கள் முழுவதும் அம்பாறை மாவட்டத்திற்குச் சொந்தமானது என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சொன்னால் கூட நாங்கள் எதுவுமே செய்ய முடியாத நிலை உருவாகும்.

நாங்கள் மாவட்டத்திற்குள் மட்டக்களப்பு எறாவூர், காத்தான்குடி ஆரயம்பதி, கிரான்குளம் குருக்கள்மடம் என்று எங்கள் எல்லைகளில் பேச்சர்ஸ் கணக்கில் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அங்கு எமது மாவட்ட எல்லையில் 03 கிலோமீட்டர் மட்டக்களப்பு மாவட்ட காணிக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியிருக்கின்றார்.

இது தொடர்பில் நாங்கள் தெரிவிக்கும் போது அபிவிருத்திக் குழுத் தலைவர் அந்த அனுமதியை எங்களிடம் கேட்கின்றார். நாங்கள் பிரச்சினைகளைச் சுட்டிக் காட்டுகின்றோம். இவற்றையலெ;லாம் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் நீங்கள் பார்க்க வேண்டிய விடயங்கள்.

கிழக்கு மாகாண ஆளுநர் அரச அதிகாரிகளுக்கு அழைப்பெடுத்து திவுலபொத்தான என்ற கிராமம் இருக்கின்றதாகவும், அதனை நிருவாக அலகிற்குள் சேர்க்க வேண்டும் எனவும் அழுத்தம் கொடுக்கின்றார். மட்டக்களப்பிலேயே இல்லாத ஒரு ஊரின் பெயர் இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருப்பதாகச் சொல்லி உள்வாங்குமாறு அழுத்தம் கொடுக்கின்றார்கள்.

1994ம் ஆண்டு தான் பதியத்தலாவ, தெஹியத்தகண்டிய போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகள் பொலனறுவை மாவட்டத்தில் இருந்தும், பதுளை மாவட்டத்திலிருந்தும் அம்பாறையில் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டன. அதுவரையில் அம்பாறையில் இருந்து ஒரேயொரு பெரும்பான்மை பாராளுன்ற உறுப்பினர்தான் தெரிவு செய்யப்பட்டார். ஆனால், இன்று நான்கு உறுப்பினர்கள் அங்கு தெரிவு செய்யப்படுகின்றார்கள். மேலுமொரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரை நாங்கள் அம்பறை மாவட்டத்திலிருந்து உருவாக்க முடியாமல் இன்றுரை திண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

இதே நிலைமைதான் திருகோணமலையிலும் இடம்பெறுகின்றது. அங்கும் எமது விகிதாசாரங்கள் குறைந்து கொண்டு வருகின்றது.

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மூன்று சமூகத்தையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் தான் இவையெல்லாம் செயற்படுத்தப்படுகின்றன.

இதைப்பற்றியெல்லாம் கேட்கப் போனால் நாங்கள் குழப்பவாதிகள் என்கிறார்கள். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்பது பிறந்த நாள் நிகழ்வல்ல அழைப்பித்து வருவதற்கு. மாவட்ட மக்களின் விடயங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டத்திற்கு நாங்கள் வந்தே தீருவோம். எமது மக்கள் சார்ந்த விடயங்கள் தொடர்பில் கேள்விகள் எழுப்புவோம்.

இவ்வாறு பல முக்கிய பிரச்சினைகள் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு இருக்கின்றது. இவற்றுக்காக குரல் கொடுக்காமல் தங்கள் குறுகிய அரசியல் இலாபத்திற்காகத் தங்களின் அரசியல் எஜமானர்களின் கைக்கூலியாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

No comments: