News Just In

6/08/2021 08:36:00 AM

ஆபத்தான நிலையில் கொரோனா தொற்று- மக்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரி முக்கிய அறிவிப்பு...!!


நூருல் ஹுதா உமர் , ஐ.எல்.எம் நாஸிம்
வர்த்தக அனுமதிப்பத்திரம் வழங்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை எல்லைக்குட்பட்ட சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த ஓரிரு நாட்களில் நடமாடும் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் 136 பேருக்கு அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அதில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் ஆலோசனையில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் அவர்களின் வழிகாட்டுதலில் மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஐ.எல் றாசிக் தலைமையில் சுகாதார பரிசோதர் குழு பங்களிப்புடன் இடம் பெற்ற அண்டிஜன் பரிசோதனையிலையே இந்த முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இங்கு கருத்து தெரிவித்த சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர், சம்மாந்துறை பிரதேசத்தில் மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து நேற்று (06) வரை 12 கிராம சேவையாளர் பிரிவுகளில் மொத்தமாக 112 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில்சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் ஒரு சில மரணங்களும் சம்பவித்துள்ளது.

எமது பிரதேசத்தின் நிலையறிந்து நடமாடும் வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் போது வியாபாரிகள் சுகாதார நடைமுறையை பின்பற்றாமல் காணப்பட்டால் பொருட்களை பொதுமக்கள் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் மக்களை கேட்டுக்கொண்டார். மேலும் இவ்வாறு நிலமை தொடருமாயின் எமது சம்மாந்துறை பிரதேசத்தை முடக்கவேண்டிய நிலை வரும் எனவும் தெரிவித்தார்.

No comments: