News Just In

5/30/2021 08:39:00 AM

ஆங்கிலேயரின் கண்டி ஒப்பந்தத்தை விட மிக மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம்- பா.உறுப்பினர் கோ.கருணாகரம்!!


அன்று ஆங்கிலேயருடன் கண்டியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அரசினால் சீனாவுடன் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தத் துறைமுக நகரம் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவாக மிளிரப் போகின்றது. தமிழர்கள் தமது உரிமைக்காக எவ்வாறு போராடுகின்றோமோ அதே போன்று எதிர்காலத்தில் சிங்கள மக்களும் சீன ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் தெரிவித்தார்.

துறைமுக நகர சட்டமூல விடயம் தொடர்பில் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசு தனக்கு நட்பு நாடாக சீனா மட்டும் போதும் என்ற நிலையில் இருப்பதாகவே தெரிகின்றது. இந்தியா இந்த நாட்டின் அயல்நாடு கடந்த காலத்தில் பல வழிகளிலே இலங்கைக்கு உதவி செய்திருக்கின்றது. குறிப்பாக 1971ம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியால் ஏற்படுத்தப்பட்ட ஆயுதக் கிளர்ச்சியை அடக்குவதற்கும். அதே நேரத்தில் 2009ம் ஆண்டு எங்களது ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்வதற்கும் என பலவாறான உதவிகளை இந்தியா செய்திருக்கின்றது. இவற்றையெல்லாம் மறந்து இலங்கை அரசு செயற்படுகின்றது. நாட்டிற்குப் பணம் தேவைதான் பணம் ஒன்றை முக்கிய கருதுகோளாகக் கருதி இந்தியா உட்பட ஏனைய நாடுகளைத் தூரத்தில் வைத்திருப்பதென்பது நல்ல விடயமாக இல்லை.

ஏனெனில் இந்த அரசாங்கத்தின் கடந்த ஆட்சியின் போது அம்பாந்தோட்டை துறைமுகத்தினை சீனாவிற்கு 99 வருட குத்தகைக்குக் கொடுத்திருக்கின்றது. 99 வருடம் என்பது மூன்று சந்ததிகளின் காலம். அதேபோன்று வடக்கில் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருக்கும் மூன்று தீவுகளை சீனாவின் நிறுவனங்களுக்குக் கொடுத்திருக்கின்றார்கள். தற்போது இலங்கையில் ஒரு தீவை உருவாக்கி அந்தத் தீவுக்குள்ளே சீனாவினால் எதுவும் செய்யலாம் என்கின்ற அடிப்படையில் கொழும்புத் துறைமுக நககரத்தைத் தாரைவார்த்திருக்கின்றார்கள். ஆனால் இந்தியாவிற்குத் ஆதரவதாக ஒப்பந்தம் செய்த கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய ஒப்பந்தத்தை இல்லாமல் செய்து. இந்தியாவை வெறுப்பெற்றியிருக்கின்றது.

தூரத்துத் தண்ணீர் ஆபத்திற்குதவாது என்கின்ற முதுமொழிக்கேற்ப எமக்கு அண்டையில் இருக்கும் நாடுதான் ஆபத்திற்கு எமக்கு உதவ வரும் என்பதை கொழும்பு கடற்பரப்பில் தற்போது எரிந்துகொண்டிருக்கும் கப்பலின் தீயை அணைப்பதற்கு இந்தியா மேற்கொள்ளும் உதவியில் இருந்து இலங்கை உணர்ந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்திலாவது இலங்கைக அரசு இவற்றை உணர்ந்து செயற்பட வேண்டும்.

சீனாவைப் பொருத்தவரையில் தனது ஆதிக்கத்தை இந்த நாட்டிற்குள் கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு மிக அண்மையில் இருக்கும் எமது நாட்டில் தனது காலைப் பதித்து இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருக்க வேண்டும் என்பதற்கும் மேலாக தங்களது கலை, கலாச்சாரங்களை இங்கு கொண்டு வருவதில் உன்னிப்பாக இருக்கின்றார்கள். இலங்கைக்கு சீனாவால் முதன் முதலாக அன்பளிப்பு செய்யப்பட்ட பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சீன மொழி பொறிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இன்று கொழும்பு மற்றும் நாட்டின் பல பிரதேசங்களிலே அவர்களால் மேற்கொள்ளப்படும் பல செயற்பாடுகளில் சீன மொழியில் எழுத்துகள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் கடந்த காலங்களிலே அடக்கி ஒடுக்கப்படடு அவர்களது கலை, கலாசாரம் மழுங்கடிக்கப்பட்டது என்பதற்காக தனி நாடு கேட்டு தமிழர்கள் நாங்கள் போராடினோம். இந்த ஒரு நிலை எதிர்காலத்தில் சிங்கள மக்களினால் சீன ஆதிக்கத்திற்கு எதிராகப் பேராடக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும் என்பதையே எமது அனுபவம் சொல்லுகின்றது. ஒரு காலத்தில் ஆங்கிலேயரின் வருகையும் இவ்வாறுதான் இருந்தது. அதன் பின்னர் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்த பின் நாங்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினோம்.

அன்று ஆங்கிலேயருடன் கண்டியில் போடப்பட்ட ஒப்பந்தத்தை விட மிகவும் மோசமானதொரு ஒப்பந்தமே துறைமுக நகர ஒப்பந்தம் என்ற பெயரில் இலங்கை அரசினால் சீனாவுடன் செய்யப்பட்டிருக்கின்றது. இந்தத் துறைமுக நகரம் எதிர்காலத்தில் சீனாவின் ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு குட்டித் தீவாக மிளிரப் போகின்றது. அங்கிருந்து சீனா இந்த நாட்டைத் தனது காலணித்துவ நாடாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளும். அந்த நேரம் இந்த நாட்டின் பெரும்பான்மை இன மக்கள் அதற்கெதிராகக் கிளர்ந்தெழுந்து போராடுவார்கள் என்பதே திண்ணம் என்று தெரிவித்தார்.

No comments: