News Just In

5/06/2021 09:11:00 AM

மட்டக்களப்பில் உள்ள குணமடைந்த வெளிமாவட்ட கொவிட் நோயாளர்களை அனுப்பிவைத்தால் வைத்தியசாலைகளில் நிலவும் இடப்பற்றாக்குறை தீரும்!!


மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா மூன்றாவது அலையின் பின்னர் மூன்றாவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் இவ்விசேட கூட்டம் நேற்று 05.05.2021 ஆந் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், நோயாளர்களுக்கான இடப்பற்றாக்குறை மற்றும் குணமடைந்து சொந்த இடங்களுக்கு திருப்பியனுப்பப்படுவோருக்கான போக்குவர வசதிகள், இக் காலகட்டத்தில் மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.

கூட்டத்தின் நிறைவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்துத் தொரிவிக்கையில், 
நேற்றைய தினம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் மேற்கொண்ட அன்டிஜன் பரிசேதனையில் சில உத்தியோகத்தர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டதனால் அநேகமான உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைக்காமல் முக்கியமான ஒரு சில உத்தியோகத்தர்களைக் கொண்டு பிரதேச செயலகத்தின் நாளாந்த சேவைகளை செய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதேவேளை வெளிமாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்ட கொவிட் நோயாளர்கள் சிலர் சிகிட்சை முடிந்து வீடு திரும்ப வேண்டியுள்ளதாகவும், அவர்களுக்கான போக்குவரத்து வசதி இன்மையால் அவர்கள் தொடர்ந்து அந்தந்த வைத்தியசாலையிலேயே இருப்பதால் அவர்களை அங்கு தொடர்ந்து வைத்திருப்பதன் காரணமாக எமது மாவட்டத்தில் இனங்காணப்படுகின்ற நோயாளிகளை இங்கு அனுமதிப்பதிப்பதற்கு முடியாதுள்ளமை தொடர்பாக இதன் போது மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த அவர்களிடம் சுட்டிக்காட்டப்பட்டதாகவும், அதற்காக இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் அந் நோயாளர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு கொழும்பு, கம்பஹா, அனுராதபுரம் போன்ற அவர்களது சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்வதாக கூறியிருந்தார். கறடியனாறு, கல்லாறு மற்றும் காத்தான்குடி போன்ற வைத்தியசாலைகளிலே இவர்கள் சென்றதன் பின்னர் போதியளவு கட்டில்கள் காணப்படுமெனவும் தெரிவித்தார்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் (Covid - 19) கொரோனா தடுப்பு செயலணிக்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இராணுவத் தரப்பு பிரதானி 23 வது படைப்பிரிவின் கொமாண்டர் மேஜ ஜெனறல் நலின் கொஸ்வத்த, 231 வது படைப்பிரிவின் விறிகேட் கொமாண்டர் வீ.எம்.என்.எட்டியாராச்சி, மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.ஆர்.குமாரசிறி, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நாகலிங்கம் மயூரன், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினி, உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ், வைத்திய நிபுணர் சுந்தரேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.











No comments: