News Just In

5/29/2021 06:52:00 PM

வீதியில் காரணமின்றி உலாவித்திரிவோர் நீதிமன்றம் செல்ல நேரிடும்- உச்சகட்ட கண்காணிப்பில் பாதுகாப்பு படை!!


நூருல் ஹுதா உமர்
நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் மாவடிப்பள்ளி பிரதேச மட்ட ஆலோசனை குழுக்கூட்டம் இன்று (29) மாவடிப்பள்ளி கமு/ அல்- அஸ்ரப் மகா வித்தியாலய மண்டபத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் இடம்பெற்றது.

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம். நஜீப், காரைதீவு இராணுவ காவலரண் பொறுப்பதிகாரி சமிந்த, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் கே. வேல்முருகு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மாவடிப்பள்ளி கிராம நிலத்தாரி ஏ.எம்.அலியார், காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், பிரதேச செயலனி உறுப்பினர்கள், சமூக மட்ட பிரதிநிதிகள், மாவடிப்பள்ளி விளையாட்டு கழக முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்த இந்த கூட்டத்தில்

எதிர்வரும் நாட்களில் இறுக்கமான சுகாதார நடைமுறைகளினை நடைமுறைப்படுத்தல், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கான பொறிமுறைகளை உருவாக்குதல், கொரோனா சட்டதிட்டங்களை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுத்தல், கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் அறிவுறுத்தல்களை வழங்குதல், தேவையின்றி வீதிகளில் நடமாடும் இருளைஞர்கள், பொதுமக்களை சட்டத்தின் முன்னிலையில் நிறுத்துதல், போன்ற பல்வேறு விடயங்கள் இங்கு அலசி ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் பல்வேறு முக்கிய ஆலோசனைகளை முன்வைத்து கருத்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எம். நஜீப் உரையாற்றும் போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளினதும், சமூகத்தினதும் நலன்கருதி தமது பிள்ளைகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

அத்தியாவசிய தேவைக்கு வழங்கிய சலுகைகளையும், அனுமதியையும் சிலர் துஸ்பிரயோகம் செய்கிறார்கள். இவர்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம் தைரியமாக வீதிகளை அளந்துகொண்டு போதைப்பொருட்களை பாவித்து கொண்டு உலாவித்திரிவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த காலகட்டத்தில் நாட்டின் சட்டதிட்டங்களை மீறுவோருக்கு எதிராக தண்டப்பணம் விதிப்பது மட்டுமின்றி சிறை செல்லும் வாய்ப்பும் உள்ளது என்பதை பெற்றோர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று மேலும் இங்கு தெரிவித்தார்.








No comments: