News Just In

4/03/2021 11:38:00 AM

இந்த அரசு சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமடைவதாலேயே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுகின்றது - பாராளுமன்ற உறுப்பினர் - கோ.கருணாகரம்!!


இந்தக் கொடூரமான ஆட்சி, ஒட்டுமொத்த சிங்கள மக்களினாலும் கொண்டு வரப்பட்ட ஆட்சி, இன்று சிங்கள மக்கள் மத்தியிலேயே பலவீனமடைந்து கொண்டு வருகின்றது. எனவே மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கான அறிகுறியாகக் கூட இது இருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

மறைந்த ஓய்வு நிலை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறும் திங்கட் கிழமையை அரசு துக்க தினமாக அங்கீகரிக்கா விடினும் தமிழ் பேசும் மக்கள் இதனை துக்கநாளாக அனுள்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்காக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்துகின்றோம். தமிழ் மக்கள் மீது நடந்த அநீதியைத் தட்டிக் கேட்டது மட்டுமல்லாது 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்திலே முள்ளிவாய்க்காலில் இலட்சக் கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டதற்கு ஐநா மனித உரிமைப் பேரவைக்கு ஒரு சாட்சியாளராக இருந்திருக்கின்றார். அந்த வகையில் எமது இனம் அவருக்கு கடமைப்பட்டதாக இருக்கின்றது, அந்த அடிப்படையில் அவருக்காக எமது கண்ணீர் அஞ்சிலியைச் செலுத்துகின்றோம்.

அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் திங்கட்கிழமையை அரசு துக்கதினமாக அனுஸ்டிக்க வேண்டும் என்று எமது கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். அரசு அதற்குச் செவிசாய்க்கின்றதோ இல்லையோ நாங்கள் தமிழ் பேசும் இனம் எதிர்வரும் திங்கட்கிழமையை எமது இனத்தின் துக்ககரமான நாளாகப் பிரகடணப்படுத்தி முடிந்தளவு எமது வீடுகளிலும், வியாபாரா நிலையங்களிலும் வெள்ளைக் கொடிகளையோ, கறுப்புக் கொடிகளையோ பறக்க விட வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்.

நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் பொதுஜனப் பெரமுன கட்சியினர் இந்த நாட்டின் ஆட்சியை நடத்திக் கொண்டு வருகின்றார்கள். 1987ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த மகாணசபை முறைமை முற்றாக நிராகரிக்கப்பட்டு ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளின் ஆளுமையின் கீழ் ஆட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. கடந்த ஜெனீவா கூட்டத் தொடரின் போது கூட மாகாணசபைத் தேர்தல்கள் முறையாக நடாத்தப்பட்டு முழு அதிகாரங்களும் பரவலாக்கப்பட்டு அந்த அந்த மாகாண மக்களின் கைகளிலே அந்த அந்த அரசுகள் கையளிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் மேலோங்கியிருக்கின்றன. அவ்வடிப்படையில் மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவாக நடைபெற வேண்டும்.

மாகாணசபைத் தேர்தல் எந்த முறையில் நடைபெற வேண்டும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது. தேர்தல்கள் ஆணையகம் பழைய முறைப்படி மாகாணசபைத் தேர்தலை நடாத்தி புதிய அரசியலமைப்பினூடாகப் புதிய தேர்தல் முறையைக் கொண்டு வரலாம் என்று ஆலோசனை கூறியிருக்கின்றார்கள். ஜெனீவா கூட்டத்தொடரின் போது ஜுலை மாதமளவில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறும் என்று கூறியிருந்தாலும். இறுதியாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே மாகாணசபைத் தேர்தலைக் கலப்பு முறையில் எழுபதுக்கு முப்பது என்ற அடிப்படையில் நடத்துவதற்கு விரும்புகின்றார்கள் என்ற கருத்து தெரிவிக்கப்படதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

அவ்வாறு எழுபதுக்கு முப்பது என்ற கலப்பு முறையிலே அந்தத் தேர்தல் நடாத்தப்பட வேண்டுமாக இருந்தால் அந்தச் சட்டம் மீண்டும் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டு பலதரப்பட்டவர்களாலும் விவாதிக்கப்படும் போது இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல் நடைபெறவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை இதைத்தான் இந்த அரசாங்கமும் விரும்புகின்றதோ தெரியவில்லை.

ஏனெனில் இந்தக் கொடூரமான ஆட்சி, ஒட்டுமொத்த சிங்கள மக்களினாலும் கொண்டு வரப்பட்ட ஆட்சி, இன்று சிங்கள மக்கள் மத்தியிலேயே பலவீனமடைந்து கொண்டு வருகின்றது. எனவே இந்தத் தேர்தலைப் பிற்போடுவதற்கான அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். எதுவாக இருந்தாலும் மாகாணசபைத் தேர்தலகள் மிக விரைவில் நடத்தப்பட்டு அந்த அந்த மாகாண மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய ஒரு சூழலை இந்த அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

No comments: