News Just In

3/18/2021 04:26:00 PM

உரிய காலங்களில் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காது- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்- ஞா.சிறிநேசன்!!


(டினேஸ்)
மக்களின் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் அரசே. அரசு உரிய காலங்களில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காது. எனவே எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெறுவதற்கு உரியவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

பொத்துவில் தெடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெறும் போராட்டத்திற்கு உணர்வுடன் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

நாளைய தினம் மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து பொது அமைப்புகளும் தங்கள் ஆதரவினை வழங்கி வருகிறார்கள். அதே போல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஆதரவினை வழங்கவுள்ளது.

அந்த அடிப்படையல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ,யோகேஸ்வனை; ஆகியோர் இன்றைய தினம் மட்டு ஊடக மையத்தில் மேற்கொண்ட ஊடக சந்திப்பின் போதே இவ்வறிவித்தலை விடுத்துள்ளனர்.

இது தெடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் மேலும் தெரிவிக்கையில்,

நாளை 19ம் திகதி காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிப் பேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு நம் ஜனநாயக உரிமையை அங்கு வலியுறுத்த வேண்டியிருக்கின்றது. நாங்கள் எழுபத்து மூன்று வருடங்களாக அரசியற் தீர்வுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம். சுமார் பதினொரு வருடங்களாக நீதிக்காகவும், உண்மைக்காகவும் போரடிக் கொண்டிருக்கின்றோம். அதற்கான பதில் இன்னும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகத் தான் நாங்கள் மேலும் மேலும் போராட வேண்டிய நிலைமை இருக்கின்றது.

இது ஜனநாயக ரீதியான சாத்வீகமான, அகிம்சை ரீதியான, வன்முறைகளற்ற, மற்றவர்களுக்கு இடையூறுகள் இல்லாத, எவரையும் பாதிக்காத, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியதான ஒரு போராட்டம்.

நேற்றைய தினம் வடக்கில் போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. எவ்வித தடைகளும் இல்லை, குழப்பங்களும் இல்லை. பொலிஸாரும் எவ்வித தடைகளும் விதிக்கவில்லை. மிகவும் சாத்வீகமான முறையில் வெற்றிகரமாக அந்தப் போராட்டம் நடைபெற்றிருக்கின்றது. எனவே வடக்கில் அந்தப் போராட்டம் எவ்வித தடங்கலும் இல்லாமல் நடைபெற்றதைப் போன்று நாளை கிழக்கிலும் போராட்டம் எவ்வித இடையூறும் இல்லாமல் நடைபெறுவதற்கு உரியவர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது.

ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொன்னால் எல்லாப் பகுதிகளிலும் ஒரே சட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும். இங்கு ஜனநாயகம் இருக்கின்றதென்றால் ஜனநாயகத்தின் குரலுக்கு இடம்கொடுக்க வேண்டும். ஜனநாயகத்தின் குரலாக இருப்பது மக்கள் உரிமை சார்ந்த விடயங்களே.

நாங்கள் விளையாட்டுக்காக இந்தப் போராட்டங்களைச் செய்யவில்லை. எமது மக்கள் ஒரு நீதியான அரசியற் தீர்வுக்காக எழுபத்து மூன்று ஆண்டுகள் போராடிக் கொண்டே இருக்கின்றார்கள். அகிம்சை, ஆயதம் தற்போது மீண்டும் அகிம்சை என்ற ரீதியில் அந்தப் போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம்.

மக்களின் இந்தப் போராட்டங்களுக்குக் காரணம் அரசே. அரசு உரிய காலங்களில் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்திருந்தால் நாங்கள் இவ்வாறான போராட்டத்தினை நடாத்த வேண்டி இருந்திருக்காது. தற்போது போராட்டங்கள் நடைபெறுகின்றது என்றால் அரசு அந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கவில்லை என்பது தான் உண்மைச் செய்தி.

நாங்கள் தேவையில்லாமல் அரசாங்கத்திற்குத் தெல்லை கொடுப்பதாக நினைக்கக் கூடாது. இன்று எமது பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டும், கடத்தப்பட்டும் இருக்கின்றார்கள். இந்த நிலையில் நான்கு வருடத்திற்கும் மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதியில் இறங்கிப் போராடியும் உள்நாட்டுப் பொறிமுறையினால் எதுவும் கிடைக்காத நிலைமையிலேயே இன்று அவர்கள் சர்வதேசத்தின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே நாளை செய்யப் போவது உரிமைக்கான, நீதிக்கான, உண்மையைப் பெறுவதற்கான போராட்டம். மாறாக அரசுக்கெதிராகவோ, அரசுக்குத் தலையிடி கொடுப்பதற்கான போராட்டமோ அல்ல.

அரசியற்தீர்வு கிடைக்கும் என்று பான் கீ மூனிடம் மஹிந்த ராஜபக்ஷ முன்னார் கூறியிருந்தார். ஆனால் பதினொரு ஆண்டுகளாக எந்தத் தீர்வும் கிடைக்காது நாங்கள் கையறு நிலையில் இருந்து இந்தப் போராட்டங்களை நடாத்த வேண்டி இருக்கின்றது என்று தெரிவித்தார்.

No comments: