News Just In

12/21/2019 10:16:00 PM

அம்பாறையில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலநிலையில் திடிரென ஏற்பட்ட மாற்றம் காரணமாக தற்போது மழை பெய்து வருகின்ற நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருகிறது.

இம்மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) காலை முதல் பலத்த மழை பெய்துவருவதால் சில பகுதிகளில் தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளநீரில் மூழ்கி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அன்னமலை, நாவிதன்வெளி பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்தின் அருகில் உள்ள பிரதான வாய்க்கால் (3ஆம் வாய்க்கால்) ஊடான வெள்ளப் பெருக்கினால் பிரதான பாதை தடைப்பட்டுள்ளது. மேலும் நேற்று இரவு பெய்த கன மழையால் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக குறித்த பிரதான பாதை சேதமடைந்துள்ளது. அத்தோடு நாவிதன்வெளி, அன்னமலை கிராமசேவகர் பிரிவுக்குட்ட மக்களின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை இணைக்கும் எல்லைக் கிராமங்களான 15ஆம் கிராமம் வேப்பையடிக்கும் தம்பலவத்தைக்குமிடையில் வீதியில் காணப்படும் பள்ளமான பாலப் பகுதியில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதனால் பொதுமக்களின் போக்குவரத்து அடிக்கடி தடைப்படுகின்றது.

எனவே மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதால் உரிய அதிகாரிகள் இதனை கவனத்தில் எடுத்து இப்பாலத்தை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.






No comments: