
அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பால் தவெகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா புன்செய் புளியம்பட்டியில் நேற்று நடைபெற்றது.
வருவாய்த் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு விருதுகளை வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் முதல் மாநாட்டுக்குச் செல்லும் இளைஞர்கள் வேறு. எங்களுடன் இருக்கும் இளைஞர்கள் வேறு. எங்களுடன் இருப்பவர்கள் மக்கள் சக்தியாக உள்ளனர். தவெகவுக்கு வாக்களித்த பலரும் இளைஞர்கள்.
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கியதை கேள்வி கேட்பவர்கள், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தபோது ஏன் கேள்வி கேட்கவில்லை?
திமுக 96 இடங்களில் வெற்றி பெற்றபோது காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நாங்கள் கூட்டணி கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கியுள்ளோம்.
திமுக, அதிமுக கூட்டணி சேர்ந்தால் என்ன தப்பு என்று டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். இரண்டும் வட துருவம், தென் துருவமாக இருந்தது அவருக்கு தெரியாதா, அதிமுகவின் கொள்கைகளை மாற்றி பேசுபவர்களை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. தேசிய கல்விக் கொள்கையில் தமிழகத்தின் நிலைப்பாடு குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தெளிவாக தெரிவித்துவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்
No comments: