இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தீவிரம்: சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்ஹார்முஸ் ஜலசந்தியை விரைவில் திறக்க வாய்ப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. அமெரிக்கா தரப்பில் 15 நிபந்தனைகளும், ஈரான் தரப்பில் 10 நிபந்தனைகளும் வலியுறுத்தப்பட்டன. இதில் பல்வேறு அம்சங்களில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பும் இணைந்து தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்தன. இந்த போர்நிறுத்தம் 2 வாரங்களுக்கு மட்டும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்ப்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத் வந்தடைந்தனர்.
ஈரான் தரப்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பாதுகாப்புச் செயலர் அலி அக்பர் அகமதியான், ஈரான் மத்திய வங்கி ஆளுநர் அப்தோல் நாசர் ஹெம்மாட்டி ஆகியோரும் சிறப்பு விமானத்தில் இஸ்லாமாபாத்துக்கு வந்தனர்.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா நட்சத்திர ஓட்டலில் நேற்று பிற்பகலில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. முதல்கட்டமாக, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குழுவினர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது அமெரிக்காவின் 15 அம்ச திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.
‘அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிடவேண்டும். செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். அணுசக்தி தளங்களை ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும். நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கக் கூடாது. ஹிஸ்புல்லா, ஹவுத்தி, ஹமாஸ் உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுவினருக்கு ஆயுதம், நிதியுதவி வழங்கக் கூடாது’ என்பது உட்பட 15 நிபந்தனைகளை வான்ஸ் வலியுறுத்தினார்.
No comments: